இலங்கையில் பரதேசி -32
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post_18.html
Galle Face |
“அம்ரி அடுத்து எங்கே?”
“சார் கிட்டத்தட்ட முடித்துவிட்டோம், கால் (Galle)பகுதி மட்டும் பாக்கியிருக்கிறது”.
“சரி போவோம், ஆனால் எங்கே போவதென்றாலும் சாப்பிட்டு விட்டுச் செல்வோம்”.
“சரி சார் ஷண்முகாஸ் போவோமா? அங்கு மதியம் நல்ல தாலி (எந்த லி, ளி,ழி என்று தெரிய வில்லை) மீல்ஸ் கிடைக்கும்”.
ஒரு பாயே சைவ உணவைச் சொல்லுகிறான் நானும் சைவப் பிரியன் என்பதால் பலமாகத்தலையாட்டினேன்.
ஷண்முகாஸ் தாலி மீல்சில் எனக்குப் பிடித்த வெண்டைக்காய் பொறியல், அவரைக்காய் சாம்பார், புடலங்காய் கூட்டு போன்ற காய்கறிகளுடன் மெலிதான சப்பாத்தி, வத்தல் குழம்பு, ரசம் மற்றும் வடை பாயாசம் என்று நல்ல சைவ விருந்து உண்டு களித்து வெளியே வந்தோம். கால் (Galle) பகுதிக்கு வந்து சேர்ந்தோம். காலே கோட்டையும் ஊரும் இருக்குமிடம் வேறு. இது கொழும்பின் மையப்பகுதியில் இருக்கிறது “கால் ஃபேஸ் கிரீன்” என்று இதற்குப் பெயர்.
கொழும்பின் அழகிய கடற்கரை யொட்டி அமைந்துள்ள பார்க் இது. மெரினா கடற்கரையை ஒட்டி இருப்பதைப் போலவே இருக்கிறது. கடல் இன்னும் நீளமாக, கடற்கரை இன்னும் சுத்தமாக, பார்க் இன்னும் பச்சையாக இருப்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.
5 ஹெக்டர் அளவில் இந்த பார்க் அமைந்துள்ளதாம். அதாவது சுமார் 1/2 கி.மீ நீளத்திற்கு இந்த பார்க் அமைந்துள்ளது. இது கொழும்பின் ஃபைனான்சியல் டிஸ்ட்ரிக்ட் இருக்கும் முக்கியப் பகுதியில் இருப்பதால் இன்னும் சிறப்புப் பெறுகிறது. 1856ல் இலங்கையின் கவர்னர் சர் ஹென்ரி ஜார்ஜ் வார்டு என்பவர்தான் இதனை அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார். 1859ல் இது கட்டி முடிக்கப்பட்டது. அப்போது இதைவிட நீளமாக இருந்ததாம். ஆரம்பத்தில் இங்கு குதிரைப் பந்தயம், கால்ஃப், கிரிக்கெட், போலோ, கால்பந்து, டென்னிஸ், ரக்பி போன்ற விளையாட்டுக்கள் விளையாடப்பட்டன.
இந்தப் பகுதியில்தான் போர்த்துக்கீசியரை முறியடிக்கவும், உள்ளே நுழைய விடாமல் செய்யவும் டச்சு பீரங்கிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனவாம்.
கிரிக்கெட் ஸ்டேடியம் இருந்த இடத்தில் இப்போது "தாஜ் சமுத்திரா" என்ற
ஐந்து நட்சத்திர விடுதி இருக்கிறது. குதிரைப்பந்தயம் இருந்த இடத்தில் இருந்த பங்களா தாஜ் ஹோட்டலின் பால் ரூமாக (Ball Room) இருக்கிறது.
Taj Samudra |
கால் சாலையிலிருந்து இந்தப் பெருங்கடலுக்கு இடைப்பட்ட இந்த இடம்தான் கொழும்பிலேயே இருக்கும் பெரிய வெட்டவெளி. நமது மெரினா போலவே இங்கு மாலை நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் கூட்டம் அள்ளுமாம். சிறு கடைகளும் ஆங்காங்கு முளைக்குமாம்.
“அப்ப தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் கிடைக்குமா?” என்று நினைத்துக் கொண்டேன்.
“சார் அதெல்லாம் கிடைக்காது”, என்றான் அம்ரி. என்னது இது, என் மைண்ட் வாய்ஸ் வெளியே சத்தமாகக் கெட்டுவிட்டது போல் தெரிகிறது.
சாலையின் மறுபகுதியில் நிறைய விடுதிகள் இருந்தன.
“சார் மசாஜ் போறீங்களா?”
“என்ன மஜா? என்ன மசாஜ்?”
“தாய் மசாஜ் சார்”
“தாய் மசாஜ் டெக்னிக் போல இங்கு இருப்பவர்கள் பண்ணுவார்களா?”.
“இல்லை சார் தாய்லாந்து பெண்களே இங்கு இருக்கிறார்கள் அங்கிருந்து இங்கு வந்து சிலகாலம் தங்கி வேலை செய்துவிட்டு திரும்பிவிடுவார்கள்”.
“அப்படியா?”
“ஆமா சார், உள்ளூர் மசாஜ் 1500 ரூபாய். தாய் மசாஜ் 2500ரூபாய்”.
“அம்ரி தாய்நாடு போகும்போது தாய் மசாஜ் என்ற விபரீத ஆசை வேண்டாம் விட்டுவிடு”.
கொழும்பு போகிறவர்களுக்கு இது நல்ல செய்தியா அல்லது கெட்ட செய்தியா என்று தெரியவில்லை.
Galle Face Hotel in 1890 |
கால் ஃபேஸ் கிரீனின் இருபுறமும் இரு பெரிய பழைய ஹோட்டல்கள் இருக்கின்றன. ஒன்று சிலோன் இன்ட்டர் கான்டினென்டல் ஹோட்டல். இன்னொன்று கால் ஃபேஸ் ஹோட்டல். இதில் இரண்டாவது மிகப்பழையது.
இந்தப்பகுதியிலிருந்துதான் சிலோன் ரேடியோவும் ஒலி பரப்பப்பட்டு இருந்ததாம். K.S. ராஜா, அப்துல் ஹமீது ஆகியோரெல்லாம் ஞாபகம் வந்தது.
Galle Face Hotel today |
அங்கிருந்து கால்ஃபேஸ் ஹோட்டலுக்குப் போனோம். இது மிகப்பழமையான முக்கியமான ஹோட்டல். அதோடு உலகில் சாகும் முன் பார்க்க வேண்டிய ஆயிரம் இடங்கள் என்ற லிஸ்ட்டில் உள்ள ஒன்று என்பதால் ஆவலைத்தூண்டியது. பல விருதுகளைப் பெற்ற இது செலக்ட் ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் இன்ட்டர் நேஷனல் குரூப்பில் ஒரு மெம்பர் ஆகும். இதன் சேர்மன் சிரில் கார்டினர் 1997ல் இறந்தபின் இதன் தற்போதைய சேர்மனாக இருப்பவர் அவர் மகன் சஞ்சீவ் கார்டினர். இலங்கை அரசு ஸ்டாம்ப் வெளியிட்டு பெருமைப்படுத்திய முதல் ஹோட்டலும் இதுதான்.
இது1864ல் பிரிட்டிஸ்காரர்களால் கட்டப்பட்டது. 1894ல் ஆர்க்கிடெக்ட் தாமஸ் ஸ்கின்னரால் தற்போதைய கட்டிடம் முடிக்கப்பட்டது. பிரிட்டிஸ் கலோனியல் ஸ்டைலில் கட்டப்பட்டது.
இங்கு பல தலைவர்களும் பிரபலமானவர்களும் தங்கியிருந்திருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமானவர், நம் பாரதப்பிதா மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ஜான்.டி.ராக்கேஃபெல்லர், டென்மார்க் இளவரசி அலெக்சான்ரா இளவரசர் பிலிப், ஜப்பானிய மன்னர் ஹிரோஹிட்டோ, அமெரிக்க அதிபர் நிக்சன், மெளன்ட்பேட்டன் பிரபு, எனப்பெரிய தலைகள் பலரும் இங்கு தங்கியிருக்கின்றனர். பார்க்க வேண்டிய இடம்தான். ஒரு நாளாவது தங்கியிருந்தால் இந்த பிரபலங்களின் வரிசையில் இணைந்திருக்கலாம். என்ன செய்வது இன்று மாலை எனக்கு சென்னைக்கு ஃபிளைட்.
அம்ரி சொன்னான், “சார் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டுத்தான் போக வேண்டும்”. நேரமிருந்ததால் தட்டாமல் அவன் வீட்டுக்குச் சென்றேன். அவனுக்கு இரு ஆண் குழந்தைகள். சின்னவன் படு சுட்டி. நான் வாங்கிக் கொடுத்த சிறிய நீச்சல் குள டப்பில் நீரில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். அந்த வீட்டுக்குப் போனது எனது சொந்த ஊரில் உள்ள முஸ்லீம் உறவினர் வீட்டுக்குப் போன உணர்வையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
அங்கிருந்து ரூமுக்குப் போய், பெட்டிகளை எடுத்துக் கொண்டு நேராக கொழும்பு ஏர்ப்போர்ட் சென்றோம். அங்கே அம்ரிக்கு நன்றி சொல்லி விடைபெற்று ஸ்ரீலங்கன் ஸ்ரிலங்கன் ஏர்வேய்சில் பயணம், கிட்டத்தட்ட என்னைத்தவிர மற்ற அனைவரும் ஐயப்ப பக்தர்கள். இருமுடி தாங்கி, காவியணிந்து தாடி வளர்த்து, காலணிகள் இல்லாமல் பயணம் செய்தனர். K. வீரமணியின் “இருமுடிதாங்கி ஒரு மனதாகி, குருவெனவே வந்தோம்” என்ற பாடல் மனதில் ஒலிக்க, விமானம் மேலேறிப் பறந்தது.
- முற்றும்.
பின் குறிப்பு : அடுத்த வாரம் முதல் "வேர்களைத்தேடி" என்ற புதிய தொடர் ஆரம்பிக்கிறது .இது நான் வளர்ந்த ஊருக்கு சென்று வந்த மலரும் நினைவுகள்.இதற்கும் உங்களின் ஆதரவைக்கோரி நிற்கிறேன்.
அன்புள்ள
பரதேசி