ராஜீவ் கொலை பகுதி -6
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/06/blog-post_29.html
Rohothaman IPS |
ராஜீவ் கொலையை விசாரித்த சிபிஐ சிறப்பு விசாரணைக்குழுவின் தலைவராக இருந்தவர் ரகோத்தமன் ஐ பி எஸ் . நளினி தன் புத்தகத்தில் அவரைப்பற்றி நல்ல விதமாகவே குறிப்பிட்டிருந்தார்.அவர் சமீபத்தில் ஆனந்தவிகடனுக்கு கொடுத்த பேட்டியில் சில கேள்விகளை கேட்டிருந்தார் . அந்தக்கேள்விகளை நீங்களே படிச்சுப் பாருங்க. எல்லாமே அதிர்ச்சி தரக்கூடியவை
1. தணு கட்டியிருந்த பெல்ட் வெடிகுண்டு எங்கே தயாரிக்கப்பட்டது? அங்கு வெடிக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸ்-ஸை யார் சப்ளை செய்தார்கள்?
2. ராஜீவ் கொலை சம்பவத்தை முடித்த பிறகு, ஒரு ஆட்டோவில் சதிகாரன் சிவராசன், சுபா மற்றும் நளினி ஆகியோர் சென்னை நோக்கி பயணிக்கிறார்கள்.
அப்போது அவர்களுடன் ஒரு தாடிக்காரன் இருந்திருக்கிறான். அவன் யார் ?
3. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரபத் 1991-ல் இந்தியத் தேர்தல் சமயத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படலாம் என்கிற ரகசியத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். அப்படியானால், அவருக்கு எங்கிருந்து தகவல் கிடைத்தது?
4. அவர் சொன்னதைக் கேட்டு, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் விட்டது யார்?.
5. 1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் 'எம்.வி. அகத்' கப்பலை இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலிலிருந்த, விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு, தன்னைத் தானே அழித்துக் கொண்டதாகக் கூறப்பட்டது. அதில் ஏதோ சதியிருக்கிறது.
6. அதே போல, கே.பி எனப்படும் கே. பத்மநாபன். விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கான ஆயுதங்கள், வெடிமருந்துகளை உலகளவில் வாங்கிக் கொடுத்துவந்த ஏஜென்ட். இவரை, இதுவரை இந்திய விசாரணை அமைப்புகள் விசாரிக்கவில்லை. இப்போதும் கூட, இலங்கையில்தான் இருக்கிறார். அவரை விசாரித்தால், ராஜீவ்காந்தி கொலை பற்றிய பல விவரங்கள் கிடைக்கலாம். இதையெல்லாம் இருபது வருடங்களாகச் செய்யமால் ஏன் விட்டிருக்கிறார்கள்?
7. ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை நடந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ கேஸெட்டை அப்போதைய இந்திய உளவுத்துறையின் இயக்குநர் எம். கே. நாராயணன் பதுக்கிவிட்டார். இதை நான் கூறவில்லை... வர்மா கமிஷன் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன் அவர் கேஸேட்டை சி.பி.ஐ-யிடம் கூட தரவில்லை என்பது இன்னொரு புதிர்.
8. ராஜீவ் காந்தி கொலை சம்பவம் நடந்த மறுநாள் டெல்லியில் நடந்த கேபினேட் கூட்டத்தில் உளவுப்பிரிவான ரா-வின் இயக்குனர், விடுதலைப்புலிகளுக்கும் ராஜீவ் கொலைக்கும் சம்மந்தமில்லை என்று பேசியிருக்கிறார். ஏன் அவர் அப்படி பேசினார்? அதன் பின்னணி என்ன
9. ஜம்மு-காஷ்மீரிலிருந்து பயிற்சி பெற்ற என்.எஸ்.ஜி. படையினரைப் பெங்களூருக்கு அனுப்புவதில் ஏற்பட்ட காலதாமதம் அது! என்.எஸ்.ஜி-யை அனுப்ப காலதாமதத்தை ஏன் செய்தார்கள்
10. என்னைப்பொறுத்தவரையில், இந்திய உளவு நிறுவனங்களுக்கு ராஜீவ் கொலை நடக்கத் தேவையான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்றே குற்றம்சாட்டுகிறேன். ( நன்றி : விகடன்.காம்)
கொடுமையை பாத்தீங்களா? அவர்ட்ட நான் கேட்கணும்னு நினைச்ச கேள்விகளை அவரே கேட்டிருக்கார் .இப்படி எல்லாரும் கேள்விகளை மட்டுமே கேட்டால் பதில் சொல்றது யாருங்க பாஸ் ?.
Murugan and Nalini |
திருமணமாகி 2 மாதம் மட்டுமே வாழ்ந்த வாழ்க்கை, அதில் உதித்த மகளுடன் கொஞ்ச காலம் கூட சேர்ந்து வளர்க்க, வாழ முடியாத நிலை, நீண்ட காலக் கொடுமைகள் ஆகியவற்றை அனுபவித்த இவர்கள் தங்கள் முதுமைக் காலத்திலாவது சேர்ந்து வாழ அரசு அனுமதிக்குமா? அரசியலை விலக்கி மனிதாபமான முடிவை எடுக்குமா அரசு?
முற்றும்