with Badava Gopi and his wife Haritha |
தமிழ்நாடு அறக்கட்டளை நடத்திய 'அன்னையர் தினம்' நிகழ்ச்சியில் (மே 6, 2017) வழக்கம்போல் பரதேசி ஆஜர். அதன் தலைவி பிரகஷிதா குப்தா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி விவாத மேடையிலும் பங்கு பெற்றேன். தொகுத்து வழங்கும் மாடரேட்டராய் இருந்தவர் பிரபல பலகுரல் மன்னன் 'படவா கோபி' அவர்கள். அவருக்கு மிமிக்ரி தானே தெரியும். கோபி என்று பெயர் வைத்தவர்களெல்லாம் விவாத மேடையை நடத்தமுடியுமா என்று நினைத்த என்னை படவாகோபி ஆச்சரியப்படுத்தினார். ( படவா, சொல்லவே இல்லை) அவர் நடத்தியிருக்காவிட்டால் ரொம்ப போர் அடித்திருக்கும்.
விவாதத்தின் தலைப்பு, “பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறித்த விஷயங்களில் பெற்றோர் தலையிட வேண்டுமா கூடாதா??” என்பது. மூன்று குரூப்கள் பிரிக்கப்பட்டது ஒன்று தாத்தாக்கள், இரண்டாவது பெற்றோர்கள், மூன்றாவது பிள்ளைகள் என்று. அடுத்த வாட்டி தாத்தா குரூப்பில் வருவேனா என்னவோ ஆனா இந்தத் தடவை பெற்றோர்கள் குழுவில் நான் பங்குபெற்று, கல்வி பற்றி ஆங்கிலத்தில் சுருக்கமாகப் பேசிய கருத்தின் தமிழாக்கம் இதோ.
பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் பிள்ளைகளை இறைவன் அளித்த சிறந்த பரிசாகத்தான் நினைக்கிறோம். எல்லாச் சமயங்களில் இல்லாவிட்டாலும் பெரும்பாலான சமயங்களில் அவ்வாறு நினைக்கிறோம்.பிற சமயங்களில் நாங்கள் எப்படி நினைக்கிறோம் என்பதை சொல்ல விரும்பவில்லை.( எல்லோரும் சீரியஸாய் இருந்ததால் இந்த ஜோக் எடுபடவில்லை !!!!!!!! ). எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் அளிக்கும் சிறந்த பரிசாக கல்வியினைக் கருதுகிறோம்.
எங்கள் பிள்ளைகள் நல்லபடியாக வளர்ந்து, வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆக வேண்டும், என்பதுதான் எங்கள் ஆசை. இந்தப் பொறுப்புணர்ச்சி எங்களுக்கு கூடும்போது கொஞ்சம் பதற்றம் வருவது இயற்கைதான். அதனால் இந்த முயற்சியில் சில தவறுகளைச் செய்து விடுகிறோம். எங்களுடைய பெற்றோர்கள் அணிந்த எங்களுக்குப் பிடிக்காத ,நாங்கள் வெறுத்த, அதே முகமூடியை நாங்களும் எடுத்து மாட்டிக் கொள்கிறோம்.
ஆனால் இங்கே சூழ்நிலை வேறு, காலகட்டம் வேறு, தேசம் வேறு, எங்கள் பிள்ளைகள் வேறுவிதமாக வளர்பவர்கள்.மேலும் இங்கு கல்வியும் வேறு அதன் செயல்முறையும் வேறு என்பதை மறந்துவிடுகிறோம்.
எனவே நம்முடைய நிறைவேறாத கனவுகளையும், விருப்பங்களையும் பிள்ளைகள் மேல் திணிக்கிறோம். குறிப்பாக கல்வியில். ஆனால் இது எதிர்மறை விளைவைத்தான் உருவாக்கும்.
Vivetha Medai |
அதே சமயத்தில் முழுவதாக அவர்களுடைய சொந்த விருப்பத்திற்கும் விட்டுவிடமுடியாது. அப்படி விட்டுவிட்டால் அவர்கள் மாறி மாறி சப்ஜெக்குகளை மாற்றி மாற்றி நம்முடைய சொத்தை அழித்துவிடுவார்கள். ஏனெனில் தங்களுக்கு என்ன கல்வி பிடிக்கும் என்பதைத் தெரிவு செய்ய அவர்களுக்கு நீண்ட காலம் பிடிக்கிறது. டிகிரி முடிக்கவும் நீண்ட காலம் ஆகிவிடுகிறது. டிரையல் மற்றும் எர்ரர் மெத்தடில் இது மிகவும் செலவு வாய்ந்தது.
ஆனால் நாம் என்ன செய்கிறோம் ?. ஒரு புறம் கட்டாயப்படுத்துகிறோம். இல்லையென்றால் மிகவும் சுதந்திரம் கொடுத்துவிடுகிறோம். ரெண்டுமே தவறுதான். ரெண்டுமே எதிர்மறையாய்ப் போய்விட வாய்ப்பிருக்கிறது.
என்னுடைய ஆலோசனை என்னவென்றால், பெற்றோர்கள் பிள்ளைகளின் முடிவில் நம்முடைய ஆலோசனைகளைச் சொல்லவேண்டும்.
ஒவ்வொரு படிப்புக்கும் என்னமாதிரி எதிர்காலம் அமையும் என்பதை முன்னரே சொல்லித்தர வேண்டும். ஏனென்றால் நல்ல ஒரு பாடப்பிரிவுதான் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும்.
ஆனால் இந்த வேலையை நாம் சர்வாதிகார முறையில் அல்லாது அன்பான வழியில் மட்டுமே அதுவும் ஆலோசனையாக மட்டுமே அணுக வேண்டும்.
அதோடு பிள்ளைகளுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள்தான் எங்களுக்கிருக்கும் மிகப்பெரிய சொத்து. எங்களுடைய வாழ்க்கை உங்களைச் சுற்றித்தான் வளைய வருகிறது. எங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமே எங்களின் ஒரே குறிக்கோள் அன்றி வேறு ஒன்றுமில்லை. எனவே பெற்றோர்களிடத்தில் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடியுங்கள் பிள்ளைகளே. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
என்ன மக்களே நான் சொன்னது சரிதானே ?