ஜபம்-பதிவு-949
மரணமற்ற அஸ்வத்தாமன்-81
(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)
அஸ்வத்தாமன் : என்னுடைய பாக்கியம், மும்மூர்த்திகளின் அம்சமாக இருக்கும் அஸ்திரங்களில் ஒன்றான நாராயணாஸ்திரத்தை நான் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குக் கொடு கிருஷ்ணா, எனக்குக் கொடு.
Related Articles
(என்று அஸ்வத்தாமன் கிருஷ்ணனின் முன்னர் மண்டியிட்டு இருக்கிறார். கிருஷ்ணர் தன் வலது கையை நீட்டுகிறார். அவர் கையில் நாராயணாஸ்திரம் வருகிறது. அதை எடுத்து அஸ்வத்தாமனிடம் கொடுக்கிறார்.)
அஸ்வத்தாமா! நாராயண அஸ்திரத்தைப் பெற்றுக் கொள்ள தகுதியானவன் நீ. இதைப் பெற்றுக் கொள் என்று கிருஷ்ணன் நாராயண அஸ்திரத்தைத் தருகிறார். இந்தா அஸ்வத்தமா இந்த அஸ்திரத்தை பெற்றுக் கொள்
(என்று கிருஷ்ணர் அஸ்திரத்தை அஸ்வத்தாமனிடம் கொடுக்கிறார். அஸ்வத்தாமன் நாராயணாஸ்திரத்தைப் பெற்றுக் கொள்கிறான்.)
இந்த அஸ்திரத்தை வரவழைக்கும் மந்திரம், செலுத்தும் மந்திரம், திருப்பி வரவழைக்கும் மந்திரம், மறைய வைக்கும் மந்திரம் ஆகியவற்றைச் சொல்கிறேன். கேட்டுக் கொள்
(என்று சொல்லச் சொல்ல அஸ்வத்தாமன் அதை கவனத்துடன் கேட்டுத் தெரிந்து கொள்கிறான்.)
அஸ்வத்தாமா! திரிஅஸ்திரங்கள் என சொல்லப்படக்கூடியவை பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்திரம், பாசுபதாஸ்திரம். மூம்மூர்த்திகளுடைய அஸ்திரம் என்ற காரணத்தால் இது திரி அஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது.
திரி அஸ்திரங்களில் ஒன்றான நாராயண அஸ்திரத்தை உனக்கு கொடுத்து விட்டேன். அடுத்து என்ன செய்யப் போகிறாய்.
அஸ்வத்தாமன் : பிரம்மாஸ்திரம் பெறப்போகிறேன்.
கிருஷ்ணர் : பிரம்மாவை நோக்கி தவம் செய்யப் போகிறாயா?
அஸ்வத்தாமன் : இல்லை
கிருஷ்ணர் : பிறகு?
அஸ்வத்தாமன் : என் தந்தையிடம் கற்றுக் கொள்ளப் போகிறேன்
கிருஷ்ணர் : உன் தந்தை உனக்கு கற்றுக் கொடுப்பார் என்று நினைக்கிறாயா
அஸ்வத்தாமன் : நான் சீடனாக இருந்து கேட்டால் எனக்குக் கற்றுக் கொடுக்க மாட்டார். அவருடைய மகனாக இருந்து கேட்கப் போகிறேன். மகனாக இருந்து கேட்கும் எதையும் எனக்கு அவர் மறுக்க மாட்டார். கண்டிப்பாக கற்றுக் கொடுப்பார். நான் அவருடைய மகனாக இருந்து கேட்கப் போகிறேன். பிரம்மாஸ்திரத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறேன்.
கிருஷ்ணர் : பிரம்மாஸ்திரத்தைக் கற்றுக் கொள்ளாதே. அதனை பிரயோகம் செய்வதால் கஷ்டங்கள், துன்பங்கள், வருத்தங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நீ மரணமற்றவன். இந்த உலகத்தில் உயிரோடு இருக்கும் வரை அந்த கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடப் போகிறது. அதனால் பிரம்மாஸ்திரத்தைக் கற்றுக் கொள்ளாதே.
நான் இந்த உலகத்தில் வாழும் வரைக்கும் கஷ்டப்படத்தான் வேண்டும் என்பது என்னுடைய விதி என்றால் அது பிரம்மாஸ்திரத்தின் மூலம் மட்டும் தான் வரும் என்று கிடையாது. வேறு எந்த ஒன்றினாலும் வரலாம் அல்லவா?
அஸ்வத்தாமன் : நான் தயாராகி விட்டேன். பிரம்மாஸ்திரத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறேன். நான் விடைபெறுகிறேன் கிருஷ்ணா.
(என்று சொல்லி விட்டு அஸ்வத்தாமன் கிளம்பி செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன்)
விதியை யாராலும் மாற்ற முடியாது. கடவுளாலும் மாற்ற முடியவில்லையே
(என்று அஸ்வத்தாமன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்)
------K.பாலகங்காதரன்
-----எழுத்தாளர், பேச்சாளர் &
வரலாற்று ஆய்வாளர்,
------31-12-2023
-----ஞாயிற்றுக் கிழமை
////////////////////////////////////////////////////
This post first appeared on பாலாவின௠பாரà¯à®µà¯ˆà®¯à®¿à®²à¯ â€à®šà®¿à®¤à¯à®¤à®°à¯à®•à®³à¯â€, please read the originial post: here