இதுபோல ஒருமுறை நடந்தாலே அது ஆச்சரியம்தான். ஆனால் இருமுறை இதுபோல நடந்ததை நினைத்தால் எனக்கே நம்ப முடியவில்லை. அந்த இரண்டு சம்பவங்களையும் சொல்கிறேன், நீங்களே சொல்லுங்கள்.
சம்பவம் - ஒன்று.
2000 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து நியூயார்க் வந்த புதுசு. கிறித்தவத் தமிழ்க் கோவில் செல்ல ஆரம்பித்த சமயம். அந்தக்கோவிலின் உறுப்பினர் வீட்டில் பிறந்த நாள் விருந்துக்காக என்னை அழைத்திருந்தார்கள். அங்கே அவர்களுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சென்னையிலிருந்து வந்திருந்தார்.
சென்னையில் நன் இருந்த போது குட்வில் மனிதவள மேம்பாட்டு (Goodwill HRD Consultants Pvt Ltd) என்ற நிறுவனத்தை நிறுவி நடத்திவந்தேன். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில்தான் நியூயார்க் வந்திருந்தேன். என்னை அந்த சென்னை நண்பருக்கு அறிமுகம் செய்தார்கள். அப்போது நடந்த உரையாடலை இங்கு தருகிறேன்.
பரதேசி : வெல்கம் டு நியூயார்க்
சென்னைக்காரர் : தேங்க்யூ, நீங்க இங்க என்ன பண்ணுறீங்க?
பரதேசி : ஒரு ஐ.டி. கம்பெனியில் இருக்கிறேன்.
சென்னை: எல்லாரும் பெரும்பாலும் ஐடி தானே இங்க, எப்ப வந்தீங்க
பரதேசி: நான் வந்து ஒரு ஆறு மாசம் ஆச்சு
சென்னை : அப்படியா இங்க எப்படிப் போகுது?
பரதேசி : பரவாயில்லை.
சென்னை: உங்கள் குடும்பம் எங்கு இருக்கிறாங்க?
பரதேசி : ஊரில்தான் இருக்கிறாங்க, ஹெச் 1 B விசா கிடைச்சதும், அவங்களை வரவழைக்கணும்.
சென்னை: மேரீட் பேச்சிலர்ன்னு சொல்லுங்க.
பரதேசி : ஹாஹா அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.
சென்னை: இந்தியாவில எந்த ஊர்?
பரதேசி : சொந்த ஊர் மதுரைப்பக்கம், ஆனா சென்னையில செட்டிலாகி கொஞ்ச ஆண்டுகள் ஆயிருச்சு.
சென்னை : சென்னையில் எங்க?
பரதேசி : மணப்பாக்கம், போரூர் போகும் வழியில் ராமாபுரம் எதிரில் இருக்கு.
சென்னை: சென்னையில் என்ன பண்ணீங்க?
பரதேசி: ஹெச் ஆர் தான் சில கம்பெனிகள்ல இருந்தேன்.
சென்னை: ஓ ஹெச் ஆரா உங்களுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள குட்வில் தெரியுமா?
பரதேசி: தெரியும்
சென்னை: குட்வில் ஹெச் ஆர்.டி கன்சல்ட்டன்டஸ்?
பரதேசி : நன்றாகத் தெரியும்.
சென்னை : அதன் சி. இ.ஒ. எனக்கு நெருங்கிய நண்பர்.
பரதேசி : அப்படியா?
சென்னை: அவர் சென்னையில் பெரிய ஆள்
பரதேசி : அப்படியா?
சென்னை : பல கம்பெனிகளுக்கு டிரைனிங், ஹெச் ஆர் மற்றும் ரெக்ரூட்மென்ட் செய் கிறார்கள்.
பரதேசி : ம்ம்
சென்னை : என் குளோஸ் ஃபிரெண்டுதான், உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் சொல்லுங்கள், அவரிடம் சொல்கிறேன்.
பரதேசி : அவரை நேரில் பாத்திருக்கீங்களா?
சென்னை: என்ன அப்படிச் சொல்லீட்டிங்க, எனக்கு அவரை நல்லாவே தெரியும்.
பரதேசி : அவர் பெயர்.
சென்னை : அவர் பெயர் ஆல்ஃபிரட் ராஜசேகரன். பக்கத்தில் இருந்த எல்லோரும் சிரிக்க நான் சொன்னேன். அந்த ஆல்ஃபிரட் ராஜசேகரன் தான் நான்.
- சென்னைக்காரருக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்துப்போனார்.
அந்த இரண்டாவது சம்பவத்தை அடுத்த முறை சொல்கிறேன் .
தொடரும்