எச்சரிக்கை: சைவ உணவு சாப்பிடுபவர்கள் இதைப் படிக்க வேண்டாம்.
Goat
வேர்களைத்தேடி பகுதி –46
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
https://paradesiatnewyork.blogspot.com/2019/07/blog-post_29.html
"தம்பி சேகப்பா, போடா சீக்கிரம் போய் மட்டன் வாங்கிட்டு வந்துரு", என்றார் அப்பா ஒரு சனிக்கிழமை காலை வேளையில். நான் ஆறாவது படிக்கும் சமயம் அது. கடைக்குத் தனியாகச் சென்று மட்டன் வாங்கும் அளவுக்கு என்னைப் பெரிய பையனாக மதிக்கிறார் என் அப்பா என்று சிறிது மகிழ்ச்சியாக இருந்தாலும், காலையில் எழுப்பி விடுகிறார்களே என்ற சிறிது எரிச்சலும் வந்தது.
கீழத்தெருவுக்கு போகும் வழியில் கறிக்கடைகள் இருந்தன. அதில் முதல்கடை ரஹீம் கடை. எப்போதும் என் அப்பா அங்குதான் வாங்குவார். தேவதானப்பட்டி முழுவதற்கும் அது ஒன்றுதான் கறிக்கடைகள் இருக்கும் இடம். ஒரு நாலைந்து கடைகள் தான் இருக்கும். அப்போதெல்லாம் கோழிக்கறி கடைகள் கிடையாது. வீட்டுக்கு வீடு கோழி வளர்க்கும் போது, யாரு கடையில் போய் வாங்குவார்கள். முழுக் கோழியை வாங்கி அதனை அடித்து என் அம்மாவுக்கு சமைக்கத் தெரியாது. எங்கள் வீட்டில் 'லெகான்' கோழிக்கறி வாங்குவதென்றால், பக்கத்து டவுணான பெரியகுளத்திற்குத் தான் போக வேண்டும். எனவே எங்கள் வீட்டில் வாரமிருமுறை, சமயங்களில் மூன்று முறை (புதன்,சனி,ஞாயிறு) எப்போதும் ஆட்டுக்கறிதான்.
மாட்டுக்கறி, மூச், அது தெற்குத் தெருவில்தான் விற்கும் என்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோ, அதைச் சாப்பிட்டும் பழக்கமில்லை. அது இன்றுவரை தொடர்கிறது.
ஒரு மஞ்சள் பையையும் பணத்தையும் வாங்கிக் கொண்டு கிளம்பும் போது, "சேகப்பா பார்த்து வெள்ளாடுதான் வாங்கனும், வாலை இழுத்துப்பார்", என்றார். சரிப்பா என்று சொல்லிவிட்டு வெளியே சென்றேன்.
என் அப்பாவும் அம்மாவும் பாசமாக கூப்பிடும் போது 'சேகப்பா' என்பார்கள். ராஜசேகர் என்னும் என் பெயரை (மாறிப்போன என் பெயரின் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்http://paradesiatnewyork.blogspot.com/2013/05/blog-post_17.html ) சுருக்கமாக 'சேகர் என்பதோடு'அப்பன்' என்று விகுதி சேர்வதுதான் 'சேகப்பன்'. கோவம் வந்தால் என் அப்பா 'படவா ராஸ்கல்'என்றும் என் அம்மா "நீசப்பய", என்றும் செல்லமாகவும் (?) கூப்பிடுவார்கள். அய்யய்யோ கதை டிராக் மாறுது.
நான் ரஹீம் கடைக்குச் சென்றபோது, அப்போது தான் 'அஜரத்' வந்து பிஸ்மில்லா சொல்லி,ஆட்டை கழுத்தில் அறுத்து, ஒரு அலுமினியக் கோப்பையில் அதன் ரத்தத்தை பிடித்துக் கொண்டிருந்தனர். ரத்தப் பொரியல் இருமலுக்கு நல்லது என்று என் ஆயா எப்போதாவது செய்வார்கள். இட்லியில் தொட்டுச் சாப்பிடுவோம். அப்ப சாப்பிட்டதோடு சரி . அதன் பிறகு சாப்பிடவே இல்லை.
ஏற்கனவே அறுக்கப்பட்டு, தோலுரிக்கப்பட்டு, தொங்கிக் கொண்டிருந்த சற்றே பெரிய சைஸ் ஆட்டில், ஒரு சிறுவன் கறுப்புக் கலர் வாலை வைத்து தைத்துக் கொண்டிருந்தான். இதைத்தான் சொல்லி, எங்கப்பா எச்சரித்திருந்தார்.
என்னைப்பார்த்துவிட்டு ரஹீம் பாய், "வாங்க தம்பி, வாத்தியாரு இன்னிக்கு வரலியா என்றார்". "இல்லை பாய், அதான் நான் வந்திருக்கேன்ல," என்றேன். “ ஒரு அஞ்சு நிமிஷம் பொறு இதோ ஆயிருச்சு”, என்று சொல்லி, ஆட்டைத் தொங்க விட்டு, கை முஷ்டியால் தோலை அப்படியே உரித்தெடுத்தார். ஆட்டை இரண்டாக வகுந்து, “சார் வீட்டுக்கு தொடைக்கறிதான் தரனும்”, என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.