Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தமிழகத்தின் இருண்ட காலம் ?


தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்.
-டி.கே. ரவீந்திரன் (விகடன் பிரசுரம்)

தமிழகத்தை தொன்மைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூன்று பகுதிகளாகப் பிரித்து ஆண்டு வந்தனர். இவர்கள் மூவர் என்பதால் ஒவ்வொரு காலத்திலும் வேறு வேறு மன்னர்கள் மற்றவர்களை அடக்கி ஆளவும் இருவர் ஒன்று சேர்ந்து மூன்றாவது ஒருவரை அடக்குவதுமாகவே பெரும்பாலும் இவர்கள் காலங்கள் கழிந்தது. ஒருவர் முன்னேறி மற்ற இருவரும் தாழ்ந்து போய் இருக்கும் போது, இவர்கள் இலங்கை, சாளுக்கியம் (ஒரிஸ்ஸா) சாவகம் (இந்தோனேசியா) கடாரம் (மலேசியா) போன்ற நாடுகளுக்கு படையெடுத்துச் சென்றனர். குறிப்பாக சோழப்பேரரசு அன்றைய நாளில் குப்த மெளரியப் பேரரசுகளை விடப் பெரியது என்று சொல்வார்கள். ஆனால் இவர்கள் மூவரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் வேறு அந்நியர் உள்ளே நுழைந்திருக்க முடியாது.  மூவரும் தமிழ் மன்னர்கள் என்றாலும் ஒற்றுமை தரும் வலிமையை உணராதே இருந்தார்கள். அதனால் இந்த ஒற்றுமையின்மை பல்லவர், நாயக்கர், மராட்டியர், மொகலாயர் மற்றும் ஆங்கிலேயர் உள்ளே வந்து ஆட்சியைப் பிடிப்பதற்கு ஏதுவாக இருந்தது. ஆனாலும் இதில் ஆங்கிலேயர் தவிர மற்ற அனைவரும் தமிழுக்கும் தமிழருக்கும் பெரிய எதிரிகளாய் செயல்படாது நம் கலாச்சாரத்தை ஒட்டியே ஆண்டனர் என்பதால் நமக்கு பெரிதாக பாதிப்பு எதுவும் வரவில்லை. இல்லையென்றால் தமிழன் கதையும் தமிழின் கதையும் எப்போதோ முடிந்துபோயிருக்கும்.

ஆனால் இதற்கு நடுவில் வரலாற்று அறிஞர்களால் முழுதும் அறியப்படாத ஒரு காலம் இருந்தது. அது கிபி 300 முதல் 600 வரைக்கும் இடைப்பட்ட முந்நூறு ஆண்டு காலம் ஆகும். அதில் களப்பிரர் நம் நாட்டைப் பிடித்து ஆண்டனர். பல வருடங்களாக அதனைப்பற்றி எந்தச் சான்றுகளும் இல்லாமல் இருந்ததால் இதனை வரலாற்று ஆய்வாளர்கள் "இருண்ட காலம்" என்றே அழைத்தனர். ஆனால் தற்சமயம் சில கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்ததனிமித்தம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இருள் விலகி வருகிறது. அந்த வரிசையில் எழுதப்பட்ட ஆய்வு நூல்தான் நான் மேற்குறிப்பிட்டுள்ள இந்தப் புத்தகம். பல புத்தகங்களைப் படித்து எழுதப்பட்ட இந்த ஆய்வு நூலில் நான் படித்துத் தெரிந்து கொண்ட களப்பிரர் கால விடயங்களை வழக்கம்போல் புல்லட் பாயின்ட்டில் கீழே தருகிறேன்.
1.   களப்பிரர், ஜைன / பெளத்த சமயத்தை வெகுவாகப் பின்பற்றி சைவ / வைணவ சமயங்களை ஒழித்ததோடு, பிராமணர்களையும் ஒதுக்கி வைத்ததால், பிராமணர்கள் திட்டமிட்டு அவர்களின் வரலாற்றுச் சான்றுகளையும் ஆவணங்களையும் அழித்துவிட்டார்கள் என்ற கூற்று இருக்கிறது. இது பெரும்பாலும் உண்மையில்லை ஏனெனில் கலப்பிரரில் சிலர் சைவ வைணவ சமயங்களையும் ஆதரித்தார்கள் மற்றும் பின்பற்றினார்கள் என்பதை ஆசிரியர் ஆதாரங்களோடு விளக்குகிறார்.
2.   களப்பிர சமூகத்தை 'கல்புரீஸ்” என்றும் இந்தோ ஆரியவம்சாவளி என்று சிலர் சொன்னாலும், களப்பிரர் கன்னடர் என்றும் ஆரம்பத்தில் ஜைன சமயத்தை மட்டுமே பின்பற்றினர் என்பதையும் வரலாற்று அறிஞர்கள் இப்போது நிரூபித்துவிட்டார்கள்.
3.   முதலில் தர்மபுரி சேலம் பகுதியை உள்ளிட்ட 'மழவ நாட்டை’ப் பிடித்து, பின்னர்கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சேர சோழ பாண்டியரை  முறியடித்து ஆட்சியைப் பிடித்தனர்.  
4.   அப்போது சேர, சோழ பாண்டிய மூவேந்தர்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்ததால், களப்பிரர் அவர்களை எளிதாக முறியடித்தனர்.
5.   ஆனால் அப்போது உன்னத நிலையில் இருந்த பல்லவரை அவர்களால் அசைக்க முடியவில்லை.அவர்கள் பிடித்த இடங்களே பரந்து விரிந்த மூவேந்தர் நிலமானதால் அதுவே போதுமான அளவு இருந்தது.
6.   இப்போது பல கல்வெட்டுகளும், செப்பேடுகளும் களப்பிர வரலாற்றை விளக்கும் வகையில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.
7.   அதன் மூலம் களப்பிரர், களப்பாழர், கள்வர், கலியரசன் என்று அழைக்கப்படும் அனைவரும் ஒருவரே என்று விளங்குகிறது. 
8.   களப்பிரர் தம்மை சூரிய சந்திர குலமென்று சொல்லிக் கொண்டனர். அவர்களுக்கு பெரிய எதிரிகளாக பல்லவரும் சாளுக்கியரும் இருந்தனராம்.
9.   கிபி.300 முதல் 600 வரை பெரும் நிலப்பரப்பை ஆண்டு அதன்பின் 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் பல பகுதிகளை குறுநில மன்னர்களாய், அதன் பின் ஊர்த்தலைவர்களாகவும் ஆண்டனர் என்று வரலாறு சொல்லுகிறது.
10.                தஞ்சைப் பகுதியின் கள்ளர் என்பவர் களப்பிரர் என்றும் அவர்களின் அரசனின் பொதுப் பெயராக அச்சுதன் என்றும் அவர்களின் அரசனின்  பொதுப் பெயராக அச்சுதன் என்ற பெயர் விளங்கி வந்தது என்றும் தெரிகிறது.
11.                64 நாயன்மார்களில் ஒருவரான 'திருமங்கை ஆழ்வார்' களப்பிர அரசர் குலத்தில் உதித்தவர் என்று ஆய்வு சொல்கிறது.
12.                சிறிது சிறிதாக தங்கள் பகுதிகளைப் பறிகொடுத்த பின் இறுதியில் களப்பிரர் கொங்கு நாட்டை ஆண்டனர் என்றும் பல்லவ மன்னன் அபராஜிதன் அங்கு படை யெடுத்து வந்து அவர்களை முற்றிலுமாக ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றினான் என்று தெரிய வருகிறது.
13.                களப்பிரரை பாண்டிய நாட்டிலிருந்து முறியடித்தவன் பாண்டியன் கடுங்கோன்.
14.                களப்பிரருக்கு கட்டுப்பட்டு சோழர் வாழ்ந்து வந்த போது, பல்லவன் சிம்ம விஷ்ணு களப்பிரரை முறியடித்து சோழரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான்.
15.                பின்னர் சோழ வம்சத்தில் சிலர் தெலுங்கு தேசத்தில் உள்ள கடப்பா கர்த்தூர் ஆகியவற்றை பல்லவருக்கோ அல்லது சாளுக்கியருக்கோ மாறி மாறி கட்டுப்பட்டு ஆண்டு வந்தனர்.
16.                தமிழிலக்கியங்களாகிய நால் வகை  பாக்களான, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா ஆகியவை களப்பிரர்  காலத்தில் சிறப்புப் பெற்றது. பதினென் கீழ்க்கணக்கு, நாலடியார் ஆகியவை களப்பிரர் காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள்.
17.                முத்தரையர், சேர்வை, முக்குலத்தோர், வன்னியர் ஆகிய சமூகங்கள் களப்பிர சமூகத்திலிருந்து வந்தவையாக இருக்கலாம் என்று  நம்பப்படுகிறது. களப்பிரர் என்றால் முரடர்கள், தமிழை அழித்தனர், காட்டு மிராண்டி ஆட்சி நடத்தினர் என்று நம்பப்பட்டவை வெறும் கற்பனைகள் தான் என்று இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
18.                களப்பிரர் காலத்தில் வட்டெழுத்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பதிகளும் வட்டெழுத்தில் எழுதப்பட்டதால் களப்பிரர் காலத்தில் இது தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
களப்பிரர் பற்றிய வியப்பூட்டும் பல தகவல்கள் பல இந்தப்புத்தகம்  முழுவதும் விரவிக்கிடக்கின்றன .தமிழர் வரலாறு பற்றி அறிய விரும்புவார்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது
 
-முற்றும்.



This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

தமிழகத்தின் இருண்ட காலம் ?

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×