Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

Crisis Management @ அப்போலோ

 விளம்பரத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு ரொம்பவும் பரிச்சயமான சொல், ‘Crisis Management’. குறிப்பாக விளம்பரத் துறையில் மக்கள் தொடர்புப் பணிகளை செய்யக்கூடிய பணியாளர்கள் (public relations) அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சொல்.

மக்கள் தொடர்பு இன்றைக்கு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டக்கூடிய வர்த்தகமாக மாறியிருக்கிறது. புரியும்படி சொல்ல வேண்டுமானால் ஒரு நடிகரை/நடிகையை பிரபலப்படுத்த பி.ஆர்.ஓ என்பவர் இருக்கிறார் இல்லையா? அதுபோல நிறுவனங்களை பிரபலப்படுத்த பி.ஆர். ஏஜென்ஸிகள் உண்டு. இந்த ஏஜென்ஸிகள் ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு கூலி கொடுக்கும் நிறுவனத்தின் பெயர் மக்கள் மத்தியில் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்க தேவையான அனைத்து வேலைகளையும் மறைமுகமாக செய்துக் கொண்டிருப்பார்கள்.

நாம் செய்தித் தாள்களிலோ இணையத்தளங்களிலோ வாசிக்கும், டிவிக்களில் பார்க்கும் நிறுவனங்களை குறித்த / பிரபலங்களை குறித்த பல செய்திகள், பெரும்பாலும் செய்தியாளர்களால் எழுதப்படுபவை அல்ல. அவை இதுபோன்ற பி.ஆர். ஏஜென்ஸியின் காப்பிரைட்டர்களால் எழுதப்படும் அறிக்கைகள். நான் இதுபோன்ற ஒரு பி.ஆர். ஏஜென்ஸியில் பணியாற்றியிருக்கிறேன். இன்றைய தமிழகத்து கல்வித்துறை அமைச்சர், முன்பு வைத்திருந்த நிறுவனம் ஒன்றுக்கு மக்கள் தொடர்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

ஒரு நிறுவனத்தையோ / பிரபலத்தையோ நல்லவிதமாக பிரபலப்படுத்தக் கூடியது மட்டுமல்ல பி.ஆர். ஏஜென்ஸிகளின் வேலை. அந்த குறிப்பிட்ட நிறுவனத்துக்கோ, அதன் தயாரிப்புக்கோ, அந்த நிறுவனம் தொடர்பான அதிகாரிகளுக்கோ, உரிமையாளருக்கோ மக்களிடையே பெயர் எதிர்மறையாக ஏற்படக்கூடிய சூழலில், அதை மாற்றக்கூடிய பணிகளை செய்வதே crisis management.

இந்த crisis managementக்கு நமக்கு தெரிந்த நல்ல உதாரணம், கூடங்குளம் அணு உலை. கூடங்குளத்தில் மக்கள் போராட்டம் வெடித்தபோது, ஊடகங்கள் தொடர்ச்சியாக அதை பதிவு செய்துக் கொண்டிருந்தன. திடீரென்று அணு மின்சாரத்தின் தேவை எவ்வளவு அத்தியாவசியம் என்று பல ஊடகங்களும் ‘யூ’ டர்ன் அடித்ததில் சென்னையின் பிரபலமான ஏஜென்ஸி ஒன்றுக்கு முக்கியப் பங்கு உண்டு. கூடங்குளம் அணு உலை குறித்த நேர்மறையான செய்திகள் அதிகமாகவும், போராட்டம் குறித்த கவனம் நீர்க்கப்பட்டதிலும் மிகத்திறமையான crisis management மேற்கொள்ளப்பட்டது. அந்த ஏஜென்ஸியின் நடவடிக்கைகளை வெளிப்படையாக சொல்ல முடியாத அளவுக்கு ‘நிழல்’ தன்மை ஏராளமாக உண்டு.

திறமையாக கையாளப்பட்ட crisis managementக்கு இன்னொரு நல்ல உதாரணம் கோகோ கோலா. எழுபதுகளின் இறுதியில் இந்தியாவில் முடக்கப்பட்ட கோலா, தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மீண்டும் சந்தைக்கு வந்தது. இன்றுவரை விற்பனையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

2003 ஆகஸ்ட் மாதம், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கை ஒன்றில் குளிர்பானங்களில் குறிப்பிடத்தக்க அளவு பூச்சி மருந்து கலக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் சந்தையில் விற்கப்பட்ட குளிர்பானங்களின் விற்பனை கடுமையான சரிவை சந்தித்தது. குறிப்பாக அப்போது மார்க்கெட்டில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த பெப்ஸி, இந்தப் பிரச்சினையால்தான் தன்னுடைய மவுஸை முற்றிலுமாக இழந்தது. இன்றுவரை பெப்ஸியால் பழைய சந்தையை பிடிக்கவே முடியவில்லை.

ஆனால்-

கோகோ கோலா இதை திறமையான crisis management நடவடிக்கைகள் மூலமாக சமாளித்தது. உடனடியாக தன்னுடைய விளம்பரங்களில் கோலா பாதுகாப்பானது என்பதை புரியவைக்கும் வாசகங்களை இணைத்தது. தங்களுடைய ஃபேக்டரிகளுக்கு பொதுமக்களை நேரில் அழைத்துச் சென்று, கோகோ கோலா எவ்வளவு பாதுகாப்பாக தயாரிக்கப்படுகிறது என்பதை காட்டி, அவர்களது testimonial விளம்பரங்களை வெளியிட்டது. சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துக் கொண்டிருந்த அமீர்கானுக்கு கோடிகளை கொட்டி, அவர் வாயாலேயே கோகோ கோலா குடித்தால் எந்தப் பிரச்சினையுமில்லை என்று சொல்லவைத்தது.

தன்னுடைய பழைய பெயரையும், சந்தையையும் மீட்க கிட்டத்தட்ட மூன்று ஆண்டு காலம் கோகோ கோலா போராடியது. அப்போது அவர்களது crisis management theoryயாக எடுத்துக் கொள்ளப்பட்ட 3P’s இன்று உலகம் முழுக்கவே விளம்பரத்துறையினருக்கு ஒரு பாடமாக ஆகியிருக்கிறது.

Price Value, Preference, Pervasive penetration ஆகியவையே அந்த மூன்று P. அதாவது இந்த காலக்கட்டத்தில் நிறுவனத்துக்கு நஷ்டமே ஏற்பட்டாலும்கூட மக்கள் வாங்கக்கூடிய மலிவான விலை, மக்கள் தாகம் எடுத்தால் முதலில் நாடக்கூடிய குளிர்பானமாக கோகோ கோலோவை முன்னிறுத்துவதற்கான நடவடிக்கை, கோலோ கிடைக்காத இடமே இல்லை என்கிற நிலையை உருவாக்குவது போன்ற பணிகளில் பெருமளவு ஆற்றலை கோகோ கோலோ நிறுவனம் செலவிட்டது. மக்களுக்கு ‘பூச்சி மருந்து’ என்கிற சொல்லே மறந்துப்போன நிலை ஏற்பட்ட பிறகே ‘open happiness’ என்று நார்மல் மோடுக்கு வந்தார்கள் கோகோ கோலாவினர்.

ஓக்கே. இப்போது ‘அப்போலோ’வுக்கு வருவோம்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்ற மருத்துவ நிறுவனமாக அப்போலோ கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் அடையாளமே அதன் விஐபி பேஷண்டுகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து சிகிச்சை பெற வருவோரால் ஏற்படுத்தப் பட்டது.

இந்திய அரசியலின் இரும்புப் பெண்மணிகளில் ஒருவராக கருதப்படும் தமிழக முதல்வர், அப்போலோவின் பேஷண்ட் என்பது அந்நிறுவனத்தின் branding தொடர்பான பெருமைதான். மறுப்பதற்கில்லை.

கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல்வர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுமே அப்போலோ வெளியிட்ட பத்திரிகைக் குறிப்பு வரை சரிதான்.

ஆனால்-

அதன் தொடர்ச்சியாக ஒருநாள் விட்டு ஒருநாள் முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ வெளியிட்ட பத்திரிகைக் குறிப்புகள் முழுக்க முழுக்க ஆர்வக்கோளாறாகவே அமைந்து விட்டது. ஒருவேளை முதல்வர் முழு உடல்நலத்தோடு திரும்பி இருப்பாரேயானால் அது அப்போலோவின் சாதனையாக பார்க்கப் பட்டிருக்கும்.

முதல்வரின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாத நிலையில் சில சட்டவல்லுநர்களின் உதவியோடு அப்போலோ வெளியிட்ட அறிக்கைகள், சமூக ஊடகங்களில் கிண்டலடிக்கப்பட காரணமாக அமைந்தனவே தவிர, அது அப்போலோவின் பெயரை ‘நல்லவிதமாக’ மக்கள் மத்தியில் பரப்ப உதவவில்லை.

போதாக்குறைக்கு அப்போலோவின் தலைவர் ரெட்டி அவர்கள், “முதல்வர் எப்போது விருப்பப் படுகிறாரோ, அப்போது அவரே டிஸ்சார்ஜ் ஆகிக் கொள்ளலாம்” என்று பத்திரிகையாளர்களை அழைத்து சொன்னது, அப்போலோவின் இமேஜை அசைத்துப் பார்ப்பதாக அமைந்துவிட்டது.

இதுபோல பத்திரிகைக் குறிப்புகள் தரவேண்டும், பேட்டி தரவேண்டும் என்றெல்லாம் அப்போலோவுக்கு எந்த கட்டாயமும் இல்லை. அவர்கள் தமிழக அரசுக்கும், பேஷண்டின் உறவினர்களுக்கும் மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். ‘தமிழக முதல்வரே எங்களிடம்தான் சிகிச்சை பெறுகிறார்’ என்று பில்டப் தர முயற்சித்து, தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் இங்கே சிகிச்சை பெறவில்லை என்றாலும்கூட அப்போலோவின் அருமை பெருமைகள் ஒன்றும் குறைந்து போய்விடப் போவதில்லை.

தங்களுடைய பிராண்ட் மேனேஜர்களையோ, பி.ஆர்.ஓ.க்களையோ கலந்தாலோசித்து இருந்தால் இத்தகைய குளறுபடிகளை அப்போலோ நிர்வாகம் தவிர்த்திருக்க முடியும். மேலும், முதல்வருக்கு கார்டியாட்டிக் அரெஸ்ட் ஆனதற்கு மறுநாள் அப்போலோ தலைவரின் மகள் ட்விட்டரில் வெளியிட்ட ‘கிரேவ்’ ட்விட், அம்மருத்துவமனையின் பெருமையை முற்றிலுமாக சீர்குலைப்பதாக அமைந்துவிட்டது. உணர்ச்சிப்பூர்வமான அந்த சூழலில் அப்போலோ, அமைதியை கடைப்பிடித்திருக்க வேண்டும்.

மேலும்-

முதல்வரின் மரணத்தை அப்போலோ தன்னுடைய பத்திரிகைக் குறிப்பாக கொடுத்தது முட்டாள்த் தனத்தின் உச்சம். தமிழக முதல்வர் காலமானதை தமிழகத்தின் ஆளுநரோ அல்லது அரசோ மக்களுக்கு தெரிவிக்கட்டுமே... அந்த கடமை அவர்களுக்குதானே இருக்கிறது? தன்னுடைய ஃபெய்லியரை எந்த நிறுவனமானது ஊடகங்களுக்கு முன்பாக இப்படி பட்டவர்த்தனமாக தானே முன்வந்து ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்?

டிசம்பர் 6ஆம் தேதி விடியற்காலை இரண்டு மணியளவில் தமிழக முதல்வரின் பூவுடலை தாங்கிய ஆம்புலன்ஸ், அப்போலோவில் இருந்து வெளியேறுகிறது. மறுநாளே காலை ஆறு மணிக்கு நாடறிந்த பத்திரிகையாளரான சோ ராமசாமி, இதே அப்போலோவில் இருந்து பிணமாக ஆம்புலன்ஸில் வெளியேறுகிறார். திரும்பத் திரும்ப டிவியில் காட்டப்பட்ட இந்த இரு விஷூவல்களும் சாதாரண மக்கள் மத்தியில் துக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

‘அப்போலோவுக்கு போனாலே அவ்ளோதான்’ என்று வழக்கமான பாமரத்தனத்தோடு தெருமுனைகளில் நின்று பேசிக்கொள்கிறார்கள். அப்போலோவின் இமேஜ், இதுபோல சாதாரணர்களிடம் ஆட்டம் காண்பதை அப்போலாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவேதான் இந்த அவப்பெயரை போக்க புதியதாக சுவாரஸ்யமான ‘அம்மா கதைகள்’ உருவாக்கி, ஆங்கில நாளேடுகளில் மெர்ஸி என்கிற நர்ஸின் படத்தைப் போட்டு crisis management செய்கிறார்கள்.

ரொம்ப சிறுபிள்ளைத்தனமான முயற்சி. இந்தக் கதைகளின் தர்க்க ஓட்டை, உடைசல்கள் அப்பட்டமாகவே தெரிகின்றன. அந்தளவுக்கு ஆக்டிவ்வாக இருந்த அம்மா, தன்னை வெளியுலகத்துக்கு வெளிப்படுத்திக் கொள்ளவே முயற்சித்திருப்பார். ‘நான்’, ‘எனது தலைமையிலான அரசு’, ‘என்னுடைய’ என்று எல்லாவற்றிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பும் சுயமோகியான ஜெயலலிதா, அப்போலோ கதைகளின் படி நார்மலாக இருந்திருந்தால், எழுபத்தைந்து நாட்கள் எதற்காக தலைமறைவு வாழ்க்கை நடத்தினார் என்று மக்கள் கேட்கமாட்டார்களா?
ஜெயலலிதாவின் வாய்ஸ் என்று வாட்சப் குழுமங்களில் பரப்பப்பட்ட குரல், சட்டமன்ற வேட்பாளர்களுக்கான படிவத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்து உள்ளிட்ட விஷயங்களையே அதிமுகவினர் உட்பட யாரும் நம்பவில்லையே?

மேலும் தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிகைகள் வாயிலாக ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம், டிஸ்சார்ஜ் தேதி என்று நாளோரு செய்தியும் பொழுதொரு வண்ணமுமாக அதிமுகவினரை உற்சாகப்படுத்த வைட்டமினாக கொடுத்த தகவல்கள் அத்தனையும் முழுக்க பொய்த்து அவர்கள் கடுமையான மனவுளைச்சலில் இருக்கும்போது இந்திய புதிய முயற்சி எப்படி வெற்றிபெறும்?

அப்போலோவின் அச்சம் தேவையற்றது. அப்போலோவில் என்னென்ன மருத்துவ வசதிகள் இருக்கின்றன, அது எவ்வகையில் மற்ற மருத்துவமனைகளைவிட சிறந்தது என்பதெல்லாம் அப்போலோவின் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு தெரியும். இதுபோல பாமரத்தனமான பரவும் சென்டிமெண்டான வதந்திகளால் அவர்கள் தங்கள் மருத்துவமனையை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. இதுபோன்ற வதந்திகளுக்கும் நீண்டகால ஆயுள் கிடையாது.

உதாரணத்துக்கு, மியாட் மருத்துவமனை தன்னுடைய சோதனைக் காலத்தை எப்படி எதிர்கொள்கிறது என்று அப்போலோ நிர்வாகம் பார்க்கலாம். ஒரு காலத்தில் பிரதமரே டெல்லியில் இருந்து வந்து அறுவைச் சிகிச்சை செய்துக் கொள்கிற அளவுக்கு பெருமை வாய்ந்த மருத்துவமனையாக இருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மழை வெள்ளத்தில் அடையாறு பாய்ந்து அத்தனை பெருமைகளையும் குலைத்தது. மியாட், உடனடியாக தன்னுடைய விளம்பர வேகத்தை குறைத்துக் கொண்டது. சில ஆண்டுகளுக்கு மியாட் என்கிற பெயரை உச்சரித்தாலே, மக்களுக்கு அந்த சோகம் நினைவுக்கு வந்துவிடும் என்று கருதி அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. அந்த நினைவுகள் முற்றிலுமாக சில ஆண்டுகளில் மறைந்து சகஜமாகும் நிலையில் மீண்டும் மியாட், விஸ்வரூபம் எடுக்கும். அதுவரை பதுங்கி, பாய்வதற்கான சூழலை எதிர்நோக்கிக் கொண்டே இருக்கும். சமீபமாக மீனாட்சி மிஷன், டாக்டர் குருசங்கர் தலைமையில் புதுரத்தம் பாய்ச்சப்பட்டு தன்னை தமிழகத்தின் முக்கியமான மருத்துவக் கேந்திரமாக அடையாளப்படுத்தி வளர்த்துக் கொள்வதை இங்கே கவனிக்கலாம்.

‘ராசியில்லாத டாக்டர்’ மாதிரி சென்டிமெண்டெல்லாம் எளிய மக்களிடம்தான் செல்லுபடி ஆகும். ஜெயலலிதா மற்றும் சோவின் மரணமெல்லாம் இன்னும் சில காலத்திலேயே மறந்துவிடும். அப்போது அப்போலோவில்தான் அவர்கள் ட்ரீட்மெண்ட் எடுத்தார்கள் என்பதையெல்லாம் யாராவது நினைவுப்படுத்தினால்கூட உடனடியாக recall செய்துக் கொள்ள முடியாத அளவுக்கு வேறு வேறு விஷயங்கள் அவர்களது மூளைகளில் திணிக்கப்பட்டு விட்டிருக்கும்.

ஆகையால்-

அப்போலோ இப்போது சும்மா இருந்தாலே போதுமானது. அதனுடைய வழக்கமான சிறப்பு எவ்வகையிலும் பாதிக்கப்பட்டு விடாது. நிகழ்ந்த சேதாரத்தை சரிசெய்ய ‘Damage control’  என்று நினைத்துக் கொண்டு ‘அப்போலோ’ என்கிற பிராண்டின் பெயரை திரும்பத் திரும்ப நினைவுப்படுத்திக் கொண்டிருந்தால் ஜெ.வும், சோ-வும் கூடவே நினைவுக்கு வந்துக் கொண்டேதான் இருப்பார்கள். அதுதான் அப்போலோவுக்கு ஆபத்தும்கூட.


This post first appeared on Yuvakrishna, please read the originial post: here

Share the post

Crisis Management @ அப்போலோ

×

Subscribe to Yuvakrishna

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×