Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பார் போற்றும் பழமொழிகள் - Proverbs that the World admires.

Proverbs that the World admires.

கரைதெரியாமல் கலங்கி நிற்கும் கலத்திற்கு "கலங்கரை விளக்கம்" எவ்வாறு வழி காட்டுகிறதோ அதுபோல வாழ்வில் கரையேறத் தெரியாமல் கலங்கி நிற்கும் மனதிற்கு கலங்கரை விளக்கமாக நின்று கரைசேர்ப்பவை நம் முன்னோர்கள் நமக்குரைத்த "நீதியுரை"களே ஆகும்.


அவ்வாறான நீதியுரைகள் பல இருப்பினும் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் முன்னணியில் நிற்பது "பழமொழி"களே.

பொன்மொழிகளாக திகழும் பழமொழிகள் எளிய சொற்றொடராக இருந்த போதிலும்... மனதில் ஆழமான புரிதல்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் இன்றளவும் இவைகள் அனைவர் மனதிலும் பார்போற்றும் பழமொழிகளாக வலம் வருகின்றன.

அவ்வாறான பழமொழிகள் பலவற்றை தொடர்ந்து பல பதிவுகளில்  பார்த்துவந்துள்ளோம்... வாருங்கள் அவைகளில் விடுபட்ட சிலவற்றை இப்பதிவிலும் தொடர்ந்து பார்க்கலாம்.

உலகம் போற்றும் பழமொழிகள்.

  • காரண குருவே காரிய குரு.
  • காணிக்கு ஒத்தது கோடிக்கு சமம்.
  • ஆசை அடுக்குது, மானம் தடுக்குது.
  • தலைகீழாக நின்று தவமே செய்தாலும் கூடுகிற காலம்தான் கூடும்.
  • தீரக் கற்றவன் தேசிகன் ஆவான்.
  • நேருக்கு நேர் சொன்னாலும் கூர் கெட்டவனுக்கு உறைக்காது.
  • பணம் போனாலும் குணம் போகாது.
  • பக்குவம் தெரிந்தால் பல்லக்கும் ஏறலாம்.
  • பத்து வருஷம் கெட்டவன் பருத்தி விதை, எட்டு வருஷம் கெட்டவன் எள்ளு விதை.
  • புகை நுழையாத இடத்திலும் நுழைந்திடுமாம் தரித்திரம்.
  • பூத உடம்பு போனாலும் புகழுடம்பு நிற்க வேண்டும்.
  • போனதை நினைத்து வருந்திக்கொண்டு இருப்பவன் புத்தி கெட்டவன்.
  • அப்பன் அருமையும், உப்பின் அருமையும் இல்லாத போதுதான் தெரியும்.
  • அறியாவிட்டால் அசலை பார், தெரியாவிட்டால் தெருவை பார்.
  • செடி இல்லா குடி பாழ்.
  • "நல்லவேளை" (ஒருவித மூலிகை செடி) முளைக்கிற இடத்தில்தான் "நாய்வேளை"யும் (ஹி...ஹி... இதுவும் மூலிகை செடிதாங்கோ) முளைக்கிறது.

  • .அந்தி சோறு உந்திக்கு ஒட்டாது.
  • வைப்பாரை வைக்கிற இடமும் தெரியவில்லை. விளக்குமாறு சாத்துகிற மூலையும் தெரியவில்லை.
  • மணம் என மகிழ்வர் முன்னே, பிணம் என சுடுவர் பின்னே.
  • அண்ணன் பிறந்து அடிமட்டம் ஆச்சு, தம்பி பிறந்து தரைமட்டம் ஆச்சு.
  • நில்லாத காலடியே நெடுந்தூரம் போகும்.
  • நெருக்க நட்டு நெல்லை பார், கலக்க நட்டு கதிரை பார்.
  • நொந்து அறியாதவன் செந்தமிழ் கற்றோன்.
  • நொய் அரிசி கொதி பொறுக்குமா?
  • பத்திய முறிவுக்குப் பாகற்காய்.
  • தூரத்து பச்சை பார்வைக்கு இச்சை.
  • மருந்துக்கு பத்தியம், தெய்வத்துக்கு சத்தியம்.
  • நெய் இல்லா உண்டி பாழ்.
  • நெய் உருக்கி, மோர் பெருக்கி, நீர் அருக்கி உண்.
  • துக்கத்தை சொல்லி ஆற்று, கட்டியை கீறி ஆற்று.
  • துளசிக்கு வாசனையும், முள்ளுக்கு கூர்மையும் முளைக்கிற போதே வரும்.
  • சூலிக்கு (கர்ப்பிணி பெண்) சுக்குமேல் ஆசை.
  • பத்திரிகை படியாதவன் பாதி மனிதன்.
  • நிலையில்லான் வார்த்தை நீர் மேல் எழுத்து.
  • நிறையக் குளித்தால் குளிர் இல்லை.
  • நல்ல காரியத்திற்கு நானூறு இடைஞ்சல்.
  • நல்லது போனால் தெரியும், கெட்டது வந்தால் தெரியும்.
  • அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டால் அரைநாண் கயிறும் மிஞ்சாதாம்.

  • நெஞ்சிலக்கணம் தெரியாதவனுக்கு பஞ்சலக்கணம் தெரிந்து பலன் என்ன?
  • அவமானம் பண்ணி வெகுமானம் பெறுகிறான்.
  • நாய் நக்கி பிழைக்கும், காக்கை கத்தி பிழைக்கும்.
  • நாயாடி மக்களோடு போயாட வேண்டாம்.
  • செய்தவர் பாவம் சொன்னவர் வாயோடே.
  • அறம்கெட்ட நெஞ்சு திறம்கெட்டு அலையும்.
  • நாக்கு புரண்டாலும் வாக்கு புரளாதே.
  • நின்ற வரைக்கும் நெடுஞ்சுவர்... விழுந்தாலோ குட்டி சுவர்.
  • நீட்டிச் சுருக்கின் மூண்டது நெடும்பகை.
  • நீர் வளம் உண்டானால் நெல் வளமும் உண்டாகும்.
  • நீரகம் பொருந்திய ஊரகத்தில் இரு.
  • நீரை சுருக்கி மோரை பெருக்கு.
  • நுண்ணறிவுடையார் நண்ணுவார் புகழை.
  • நாய் நன்றி மறவாது, பசு கன்று மறவாது.
  • காடு அறியாதவன் கல்லாங்காட்டை உழுவான்.
  • காணியை நட்டபின் களத்தில் நில்.
  • நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்கு புல் சுமை போகாது.
  • நீர்ச்சோறு தின்று நிழலில் அமர்ந்தால் மலடிக்கும் வருமாம் மசக்கை.
  • நீர் பெருத்தால் நெல் சிறுக்கும்.
  • வெந்த சோற்றை தின்ற வாய் வந்ததையெல்லாம் பிதற்றும்.

  • காடி கஞ்சி ஆனாலும் மூடிக்குடி.
  • தீவினை முற்றி பாழ்வினை ஆச்சுது.
  • தேராச் செய்கை தீரா சஞ்சலம்.
  • காய்ச்சல் (சூடு) இல்லா உடலும், காய்ச்சல் (விளைச்சல்) இல்லா நிலமும் இருந்தும் பயன் இல்லை.
  • கார் அறுக்க கத்திரி பூக்க.
  • கார்த்திகை கீரை கணவனுக்கு ஆகாது.
  • வெந்தயம் போடாத கறியும் கறியல்ல, சந்தடி இல்லாத ஊரும் ஊர் அல்ல.
  • காரிகை கற்று கவி பாடுவதிலும், பேரிகை அடித்து பிழைப்பது நன்று.
  • நால்வர் கூடினால் தேவர் சபை.
  • நாலு செத்தை கூடினது ஒரு கத்தை.
  • நாழி உடைந்தால் நெல்லுக்கு சேதமா?
  • நாழி பணம் கொடுத்தாலும் மூளிப் பட்டம் போகாதாம்.
  • நாற்கல கூழுக்கு நானே அதிகாரி.
  • நின்ற இடத்தில் நெடுநேரம் நின்றால் நின்ற மரமே நெடுமரமாம்.
  • காரைக் கிள்ளி நடு, சம்பாவை அள்ளி நடு.
  • நாயகன் பட்சம் ஆயிரம் லட்சம்.
  • கல ஓட்டை அடைக்காவிடில் கப்பலும் கவிழும்.
  • காலத்தில் போனாலும் சூலத்தில் போகாதே.
  • காலை உப்பலும், கடும்பகல் வெயிலும், மாலை மேகமும் மழைதனில் உண்டாம்.
  • காதில் கடுக்கன் முகத்திற்கு அழகு. வாயில் துடுக்கன் அகத்திற்கு எழவு.

  • சூட்சுமம் அறியாதவனுக்கு கூச்சமும் இல்லை, மோட்சமும் இல்லை.
  • காலை செவ்வானம் கடலுக்குள் பெய்யும்.
  • காலைப் புல்லும், மாலைக் கல்லும் ஆளைக் கொல்லும்.
  • பணம் பார்த்து பண்டம் கொள். குணம் பார்த்து பெண்ணை கொள்.
  • நல்லப்பாம்பையே ஆட்டுவிக்கிறவன் நாகப்பூச்சியைக் கண்டு அஞ்சுவானா?
  • நல்லாரை கண்டால் நாய் போல, பொல்லாரை கண்டால் பூனை போல.
  • நன்னிலம் கரந்தை, நடுநிலம் கொழிஞ்சி.
  • நா என்னும் அட்சரமே நாதன் இருப்பிடம்.
  • நாய் அறியுமா நறு நெய்யை?
  • நாய்க்குட்டி போட்ட இடமும் பாழ், நாரத்தை பட்ட இடமும் பாழ்.
  • பணக்காரனும் தூங்குவதில்லை, பயித்தியக்காரனும் தூங்குவதில்லை.
  • பணம் அற்றால் உறவு இல்லை, பசி அற்றால் ருசி இல்லை. 
  • படுத்தால் பசி பாயோடே போய்விடும்.
  • காளி தோட்டத்து கற்பக விருட்சம் யாருக்கும் உதவாது.
  • வில்லங்கத்தை விலைக்கு வாங்காதே. கடல் ஆழம் தெரியாமல் காலை விடாதே.

  • நற்குணமே நல்ல ஆஸ்தி.
  • நரப்புப்புல்லை பிடுங்கினாலும் வரப்பு புல்லை பிடுங்காதே.
  • சுமப்பவன் அல்லவோ அறிவான் காவடியின் பாரத்தை.
  • சூதாடியின் கையும், கோள் சொல்பவனின் வாயும் சும்மா இராது.
  • நல்ல நாளில் நாழிப்பால் கறக்காத மாடா ஆகாத நாளில் அரைப்படி கறக்கும்?
  • நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி நாகமணியே, குப்பைக்குள் இருந்தாலும் கோமேதகம் கோமேதகமே.
  • நடவாத காரியத்தில் பிடிவாதம் பிடிக்காதே.
  • நடை சிறிது ஆகில் நாள் ஏறும், படை சிறிது ஆகில் பயம் ஏறும்.
  • நம்பியான் விட்டதே தீர்த்தம்.
  • நயத்தில் ஆகிறது பயத்தில் ஆகாது.
  • வெற்றிலையை தண்ணீரும், தாசியை மஞ்சளும் தளதளப்பாய் வைத்திருக்கும்.
  • வையகக் கூத்தே வயிற்றில் அடக்கம்.
  • நல்லோரை நாவில் உரை, பசும்பொன்னை கல்லில் உரை.
  • நல்லோர் நடத்தை தீயோருக்கு திகில்.
  • சபலமாய் வாழ்பவன் அவலமாய் சாவான்.
  • கெஞ்சும் புத்தி கேவலத்தையே கொடுக்கும்.

  • பிறளா மனசு இருளாமல் இருக்கும்.
  • ஆண்ட பொருளை அறியாதார் செய் தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண்.
  • ஆய்ந்து பாராதான் காரியம், தான் சாய்ந்து துயரம் தரும்.
  • பஞ்சமே வந்தாலும் நெஞ்சமே அஞ்சாதே.
  • பகைவர் உறவு புகை எழா நெருப்பு.
  • தை குறுவை தரையைவிட்டும் எழும்பாது, தவிட்டுக்கும் உதவாது.
  • தொட்டுப்பார்த்தால் தோட்டியும் உறவாம்.
  • தோட்டம் வைத்தவனுக்கு வாட்டம் இல்லை.
  • நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
  • நல்லவன் ஒருவன் துணையாக நின்றால் அறாத வழக்கும் அறும்.
  • நகைத்து இகழ்வோனை நாய் என நினை.
  • நாண் இல்லா நங்கை, பூண் இல்லா மங்கை.
  • நாணம் இல்லா கூத்தாடிக்கு நாலு பக்கமும் வாசல்.
  • நாணும் கால் கோணும்.
  • செய்த பாவத்தை சொல்லிக் கழி.
  • ஆற்றாமையால் அரற்றுவதை விட சுவரோடவாவது சொல்லி அழு.

  • செய்தவனுக்கு செய், செத்தவனுக்கு அழு.
  • செருப்பின் அருமை வெயிலில். நெருப்பின் அருமை குளிரில்.
  • ஜென்ம குணம் செருப்பால் அடித்தாலும் போகாது.
  • டமாரம் அடிபட, மரகதம் உடைபட.
  • தங்கம் வியாழன் தன்னோடு மூன்று பேர்.
  • தசை கண்டு கத்தியை நாட்டு.
  • தட்ட தட்ட எள்ளு, கொட்ட கொட்ட கேழ்வரகு.
  • தட்டார்கள் புரட்டைக் கூற எட்டாறு வழியும் போதா.
  • தட்டாரப்பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழை வருமாம்.
  • தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலேதான் பாயும்.
  • தரித்திரப்பட்டாலும் தைரியம் விடாதே.
  • தலைஎழுத்து தனித்திருக்க தரித்திரத்தால் ஆவதென்ன?
  • நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாலை குழைத்துக்கொண்டு வாசல்படி தாண்டும்.
  • நாயின் விசுவாசம் பூனைக்கு வருமா?
  • தறுதலையிடம் தயவை எதிர்பார்க்கலாமா?
  • நூறு பலம் மூளையைவிட ஒரு பலம் இதயம் உயர்ந்தது.
💞💞💞💞💞💞

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? "ஆம்" எனில்... உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன்...




This post first appeared on Scientificjudgment, please read the originial post: here

Share the post

பார் போற்றும் பழமொழிகள் - Proverbs that the World admires.

×

Subscribe to Scientificjudgment

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×