Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு ஒன்பதாம் பிறந்தநாள்!

ள்ளம் உறை தமிழ்ப் பற்றாளர்களே!

உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ வலைப்பூ ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து நேற்று முதல் (23.04.2022) பத்தாம் ஆண்டில் பாதம் எடுத்து வைத்துள்ளது என்பதைத் தெரிவித்து மகிழ்கிறேன்!

இந்த ஆண்டு நான் எழுதியவை மொத்தம் ஏழே பதிவுகள்தாம்! ஆனாலும் 15,200 பார்வைகளை இந்த ஆண்டு தளம் பெற்றிருக்கிறது என்பதை அறியும்பொழுது நான் அடையும் நெகிழ்ச்சி கொஞ்சமல்ல!


நீங்கள் என் மீது வைத்திருக்கும் இந்த எதிர்பார்ப்புக்காகவாவது நான் வரும் ஆண்டில் அதிகம் எழுத வேண்டும்! முயல்கிறேன்!

எழுதியதே குறைவு என்பதால் இந்த ஆண்டில் பழைய பதிவுகளே அதிகம் பார்வையிடப்பட்டுள்ளன. என்றாலும் இந்த ஆண்டு வெளியிட்ட ‘நட்சத்திர எழுத்தில் பெயர் சூட்டுவது தமிழர் வழக்கமா? - ஒரு நறுக்குச் சுருக்கான ஆய்வு’ எனும் கட்டுரை 260 பார்வைகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்திருப்பதைப் பார்க்கையில் ஆழமான பதிவுகளை என்றும் நம் மக்கள் கைவிட மாட்டீர்கள் எனும் நம்பிக்கை உறுதிப்படுகிறது. மிக்க நன்றி!


இந்த ஆண்டு பதிவுலகில் நடந்த மிக முக்கியமான நிகழ்வு, பீட்பர்னரின் (Feedburner) சேவை நிறுத்தம் பற்றிய அறிவிப்பு. இந்த அறிவிப்பைப் பார்த்து விட்டு இனி பீட்பர்னரின் மின்னஞ்சல் சேவை நிறுத்தப்படும் என்று நினைத்து வேறு மின்னஞ்சல் சேவைக்கு மாறிய மேதாவிகளில் (?) நானும் ஒருவன். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. புதிதாக யாரும் மேற்கொண்டு இணைய முடியாதபடிதான் போயிற்றே தவிர மின்னஞ்சல் சேவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இது தெரியாமல் நான் சேவை மாறியது மட்டுமின்றி வேறு சில பதிவர்களையும் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனது, இன்னும் இருக்கிற எல்லாரையும் மாறச் சொல்லிக் காணொளிப் பதிவு வெளியிட்டது, அதற்கெனவே வேலை வினைகெட்டு யூடியூபு வலைக்காட்சி தொடங்கியது எல்லாம் வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் இடம்பெற முடியாமல் போனாலும் இந்த வலைப்பக்கத்திலாவது பதிவு செய்யப்படட்டும் என எழுதி வைக்கிறேன்.

இதைப் படித்து விட்டு "அட டேய்! தேவையில்லாம எங்கள வேற பீட்பர்னர்லேர்ந்து விலக வெச்சிட்டியேடா" என யாரும் கட்டையை எடுத்துக் கொண்டு வராமல் இருந்தால் சரி.

இந்த ஆண்டுப் பதிவுலகின் பேரிழப்பு நெல்லை சித்திக் ஐயா அவர்களின் மறைவு!

கடந்த ஆண்டுப் பிறந்தநாள் பதிவிலேயே ஐயாவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இந்த ஆண்டுப் பதிவுக்குள் அவரைப் பற்றி எழுத எப்படியும் பல தகவல்கள் இருக்கும் என்று நம்பினேன். ஆனால் இப்படி அவருடைய இறப்பைப் பற்றி எழுத வேண்டி வரும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

எவ்வளவுதான் இணையத்தில் நண்பா, தோழா எனப் பழகினாலும் எதிர்க் கருத்துடையவர்களோடு சண்டை என வந்தால் அதுவரை பழகிய யாரும் நம்மோடு உடன் நிற்க மாட்டார்கள் (விலக்கானவர்களும் உண்டு!). ஆனால் ஒரு தமிழ்ச் சொல் தொடர்பாக எனக்கும் ஒரு காவி நிறத்தானுக்கும் இடையில் நடந்த சண்டையில் தானாக முன்வந்து கருத்தாயுதம் கொடுத்ததோடு உடன் நின்றும் சண்டையிட்டவர் சித்திக் ஐயா!

என்னுடைய ஒவ்வொரு பதிவையும் தவறாமல் படித்து, கருத்திட்டு, பகிர்ந்தளித்து, பாராட்டி ஊக்குவித்தவர். நான்கு சொற்கள் கூட்டி எழுதத் தெரிந்தாலே எழுத்தாளர் என அறிவிப்புப் பலகை வைத்துக் கொள்பவர்களுக்கிடையில் தமிழில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்தும் ஒரு மாணவன் போல அடக்கம் கொண்டு திகழ்ந்த மாண்பாளர்!

தமிழில் நல்ல வேர்ச்சொல் அறிவு கொண்டவர். தமிழாய்வு செய்து கொண்டிருந்தவர். ஒன்றுக்கு இரண்டு வலைப்பூக்கள் (எனக்குத் தெரிந்து) எழுதி வந்தவர். தமிழில் ‘அயற்சொல் அகராதி’ எழுதிக் கொண்டிருந்தவர். தமிழில் எப்பொழுது, என்ன ஐயம் கேட்டாலும் நான்கைந்து வரிகளில் அவ்வளவு அழகுற விளக்குவார்! சிறந்த ஆசான்! ஆனால் இளைஞர்களைக் கூட அவ்வளவு மதிப்புடன் விளிப்பார், நடத்துவார்.

அப்பேர்ப்பட்டவர் மகுடைத் (Corona) தொற்றால் திடீரென மறைந்தது (சூன் 2021) மிகுந்த துக்கத்தைக் கொடுத்தது! ஐயா மறைந்தாலும் அவரது தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்து வரும் அவர் மனைவியார் மன்சூரா பீவி அம்மையாருக்கு என் சிரம் தாழ்ந்த போற்றுதல்கள்! ஐயாவின் புகழ் வாழ்க!

இந்த ஆண்டுப் பதிவுலகப் பயணத்தின் பெருமகிழ்ச்சி, வலைப்பதிவர்கள் சிலரை நேரில் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு!

பதிவுலகில் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர்கள் ‘மகிழ்நிறை’ மைதிலி கஸ்தூரிரங்கன், அவர் கணவர் ‘மலர்த்தரு’ கஸ்தூரிரங்கன் ஆகியோர். 2014 முதல் பதிவுலகில் நட்பாடி வந்த நாங்கள் தனிப்பட்ட முறையிலும் தோழமையாகி ஒரு கட்டத்தில் ஒரே குடும்பம் போலவே ஆகி விட்டாலும் முதன் முறையாகக் கடந்த 02.03.2022 அன்றுதான் நேரில் சந்தித்தோம்!

சென்னை நூல் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள் எங்கள் வீட்டுக்கும் வந்ததும் எதிர்பாரா மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனோம்! மைதிலி, கஸ்தூரிரங்கன் இருவரையும் விடக் குழந்தைகள் நிறைமதிவதனாவும் மகிமாவும் என் மீது கொண்டிருக்கும் அன்புக்கு உலகில் எதையுமே ஈடு சொல்ல முடியாது! அதே போல, புது மனிதர்கள் யாரைக் கண்டாலும் ஓடி ஒளியும் எங்கள் வீட்டுச் செல்லம் மகிழினி இவர்கள் நால்வரையும் பார்த்ததும் பலநாள் பழகியது போல் ஒட்டி உறவாடியதும் அவர்கள் கிளம்பும்பொழுது தானும் வருதாகச் சொன்னதும் இன்று நினைத்தாலும் நம்ப முடியவில்லை! உண்மையான அன்புக்குத் தொலைவு ஒரு பொருட்டில்லை!

அடுத்து, புகழ் பெற்ற பதிவரும் ‘நியூயார்க் தமிழ்ச் சங்க’ இலக்கியக் குழுத் தலைவருமான ‘பரதேசி @ நியூயார்க்’ ஆல்ஃபிரட் ராஜசேகரன் தியாகராஜன் அவர்கள் என் வீட்டுக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்க நிகழ்வு!

பரதேசி எனும் புனைபெயரில் பல ஆண்டுகளாக எழுதி வரும் ஆல்ஃபி அவர்கள் தனது வலைப்பதிவுகளைத் தொகுத்து நூலாக வெளியிட இருக்கிறார். அதற்கான பணிகளை நான்தான் அவருக்குச் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதால் அது தொடர்பாக என்னைச் சந்திக்கக் கடந்த மாதம் வந்திருந்தார்.

அயல்நாடு வாழ் தமிழர்களில் தமிழ் வளர்ப்போர் ஏராளம். ஆனால் தமிழனையும் வளர்ப்போர் ஓரிருவரே! ஆல்ஃபி அப்படிப்பட்டவர்!

தமிழ்நாட்டின் சவ்வாது மலைப் பகுதியில், பின்தங்கிய ஓர் ஊரைத் தானாக முன்வந்து பொறுப்பேற்றுக் கொண்டு அவர்களுக்குக் கல்வியும் அடிப்படை வசதிகளும் தன் சொந்தச் செலவில் செய்து கொடுத்து வரும் ஆல்ஃபி அவர்களின் தொண்டு உண்மையில் சிரமேற்கொண்டு போற்றுவதற்குரியது! அப்பேர்ப்பட்டவர் என்னைச் சந்திக்க வந்தது பெருமைக்குரிய தறுவாய்!

விரைவில் அவருடைய நூல்கள் வெளியாக உள்ளன. நம் மக்கள் ஆதரவளிக்க வேண்டுகிறேன்!

மற்றபடி, நான் எழுதினாலும் எழுதாவிட்டாலும் தொடர்ந்து இந்த வலைப்பூவுக்கு வருகை தந்து என் எழுத்துக் கடமையை நினைவூட்டிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி!

பதிவுலகம் முன்பு போல் இயங்காததாலும் வலைப்பதிவில் எழுதுவதை விடச் சமுக ஊடகங்களில் எழுதுவது பன்மடங்கு எளிதாகவும் பெருத்த வரவேற்புக்குரியதாகவும் இருப்பதாலும் இனி வலைப்பூ என்பது நமது முக்கிய பதிவுகளைத் தொகுத்து வைப்பதற்கான ஒரு சேமிப்பகம் போலத்தான்!

எனவே என் எழுத்துக்களைத் தொடர்ந்து படிக்க விரும்பும் அன்பர்கள் கீழ்க்காணும் சமுக ஊடகங்களில் பின்தொடர வேண்டுகிறேன்!

துவிட்டர் : https://twitter.com/Gnaanapragaasan

பேசுபுக்கு : https://www.facebook.com/gnaanapragaasan.e.bhu

இன்சுடாகிராம் : https://www.instagram.com/gnaanapragaasan_e_bhu/

கோரா : https://ta.quora.com/profile/இ-பு-ஞானப்பிரகாசன்-Gnaanapragaasan

தமிழ் நலனும் தமிழர் நலனுமே இலக்கு! அதை எங்கு செய்தால் என்ன? எங்கு அதிக வரவேற்புக் கிடைக்குமோ அங்கே செய்வோம்!

அதற்காக இனி வலைப்பூ எழுத மாட்டேன் என நினைத்து விடாதீர்கள்! எத்தனை நாடு போனாலும் தாய்மண்ணுக்கு வந்துதானே ஆக வேண்டும்? நம் வேர்கள் அங்குதானே இருக்கின்றன?

எனவே நேரம் கிடைக்கையில் வலைப்பூவில் மலர்வோம்!

சமுக ஊடகங்களில் எந்நேரமும் தொடர்வோம்!

வாழ்க தமிழ்!

வெல்க தமிழர்!

Share the post

உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு ஒன்பதாம் பிறந்தநாள்!

×

Subscribe to அகச் சிவப்புத் தமி

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×