Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இப்படியும் கொண்டாடலாம் காணும் பொங்கல்! – சமயவாதம் தகர்க்கும் ஒரு புது முயற்சி


காணும் பொங்கல் - தமிழ் மக்களின் உறவுச் சங்கிலிக்கு உயவு (lubrication) கூட்டும் திருநாள்!

நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில், இந்நாளில் மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா போன்றோர் குடும்பத்துடன் நம் வீட்டுக்கு வருவார்கள். பொங்கல் பரிசாக அன்பளிப்புகள், தின்பண்டங்கள் போன்றவை தருவார்கள். பொங்கல் இனாம் எனும் பெயரில் செலவுக்குக் காசும் கொடுப்பார்கள். மாமா பிள்ளைகளுடனும் சித்திக் குழந்தைகளுடனும் கரும்பு கடித்தபடி குதூகலமாய் ஊர் சுற்றுவோம்.

சொந்தக்காரர்களுக்கு மட்டுமில்லாமல், வேளாண் கூலித் தொழிலாளிகள், அடிமட்டத் தொழில்கள் செய்யும் தோழர்கள் போன்றோருக்கும் இனாம் கொடுத்து மகிழ்விப்போம். தமிழ் இனத்தின் மூத்த முதுகுடிகளான மலைக் குறவர்கள் கூட இந்த நாளன்று மலையிலிருந்து இறங்கி வந்து விடுவார்கள். மலையில் தாங்கள் பிடித்துப் பழக்கிய கரடி போன்ற விலங்குகளை வைத்து வித்தை காட்டிக் காசு கேட்பார்கள். நாம் காசு கொடுத்தால் அதைக் கூடச் சும்மா வாங்காமல் மறுகையாக மலைத்தேன், மூங்கிலரிசி என நாம் கொடுத்த காசை விடப் பன்மடங்கு மதிப்பு மிக்க பொருட்களை வழங்கிச் செல்வார்கள்.

இப்படிக் காணாதவற்றையெல்லாம் காணும் திருவிழாவாக இருந்ததால்தான் காணும் பொங்கல் எனப் பெற்றது இத்திருநாள். ஆனால் இவையெல்லாம் எண்பதுகள் வரையான கதை.

இன்றோ காணும் பொங்கல் என்றாலே கடற்கரைக்கும் திரைப்படத்துக்கும் பல்லடுக்கு வணிக வளாகங்களுக்கும் செல்வதுதான் என்றாகி விட்டது. காலத்துக்கேற்ப வழக்கங்களும் மரபுகளும் மாறுவது இயல்பே. அதுவும் பொங்கல் பண்டிகையே பழையன கழிதலும் புதியன புகுதலும்தாம் வளர்ச்சி எனும் பேருண்மையை உணர்த்துவதுதான்!

ஆனால் மாற்றம் என்பது தான், தன் குடும்பம் என்பதாகச் சுருங்காமல் பொதுநலன் சார்ந்ததாக விரிவடைந்தால் அது அந்தச் சமுகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக அமையும். அப்படித் தமிழர் விழாவான காணும் பொங்கலிலும் இன்றைய வாழ்க்கை முறைக்கேற்ப ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டு வந்தால் என்ன என்று தோன்றியதன் விளைவே இக்கட்டுரை.

வேளாண் பொருளாதாரத்தையே மையமாகக் கொண்டிருந்தது நம் பழைய தமிழ்நாடு. உழவர்கள் மட்டுமில்லாமல் எல்லாத் தொழிலாளர்களுமே பொழுதோடு வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பி மாலை முழுதும் குடும்பத்துடன் கழித்த நாட்கள் அவை. அதனால் பொங்கல் விடுமுறைகளையும் மொத்தமாகக் குடும்பத்துடனே கழிக்காமல் அதில் ஒரு நாளைச் சொந்தங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்காக ஒதுக்கும் வழக்கம் தோன்றியது.

ஆனால் அன்றாடம் பணி முடிந்து வீடு திரும்பவே முன்னிரவாகி விடும் இன்றைய வாழ்க்கைமுறையில் கணவனும் மனைவியும் குழந்தைகளும் தங்களுக்குள் முகம் பார்த்துப் பழகுவதே இப்படிப்பட்ட விடுமுறை நாட்களில்தான். எனவே அந்தக் காலத்து அதே கொண்டாட்ட முறைகளை இன்று எதிர்பார்க்க முடியாதுதான்.

மேலும் ஊரகப் பொருளாதாரத்தின் ஆணி வேரான உழவுத்தொழிலும் அதைச் சார்ந்த பிற தொழில்களும் பெரிதும் நசிவடைந்து பிழைப்புக்காகப் பெரும்பாலானோர் நகரங்களுக்கும் மாநகரங்களுக்கும் குடிபெயர்ந்து விட்டனர். ஆகவே காணும் பொங்கலுக்காக வெகு தொலைவில் இருக்கும் சொந்த ஊரில் வாழும் உறவுகளைத் தேடிச் சென்று கொண்டாடித் திரும்புவது இன்று அவ்வளவு எளிதில்லை.

ஆனால் உறவு என்றால் நம் குடும்பத்தைச் சேர்ந்த உறவுகள் மட்டும்தானா?

நம் அக்கம் பக்கத்தில் இசுலாமியம், கிறித்தவம், சமணம் எனப் பிற சமயங்களைச் சேர்ந்த உடன்பிறப்புகள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு இந்நாளில் சென்று அவர்களுக்குப் பொங்கல் பரிசுகளை வழங்கி மகிழ்வித்தால் என்ன? காணும் பொங்கலை அவர்களோடு செலவிட்டால் என்ன? “யாதும் ஊரே! யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் வழி வந்த நாம் அதை வெறும் வாய்ச்சொல்லாக இல்லாமல் வாழ்வியலாகவும் கடைப்பிடித்தால் என்ன?

சொல்லப் போனால், தமிழர்களுக்கு இது புதிது ஒன்றும் இல்லை!

காலம் காலமாகவே பொங்கலை நாம் சமய எல்லைகள் கடந்து அனைவரோடும் சேர்ந்துதான் கொண்டாடி வருகிறோம். காரணம் பலரும் நினைப்பது போல் இஃது இந்துச் சமயத்தைச் சார்ந்த விழா இல்லை. எந்தச் சமயமும் தமிழ் / இந்திய மண்ணுக்குள் காலடி வைக்கும் முன்பிருந்தே தமிழ் மக்கள் வெறும் இனக் குழுவாக வாழ்ந்த காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வரும் அறுவடைத் திருவிழா.

உலகம் முழுவதும் இப்படி மொத்தம் 77 அறுவடைத் திருவிழாக்கள் இருப்பதாகக் கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பட்டியலிடுகிறது. அவற்றுள் இந்தியாவில் மட்டுமே 25 விழாக்கள்! அவற்றில் பொங்கல் விழா பற்றி “இந்தியாவின் தமிழ்நாட்டிலும் பிற பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் கொண்டாடும் திருவிழா” என்றுதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே தவிர சமயத்தின் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

உண்மையில் தென் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் இசுலாமியர் வீடுகளில் பெரும்பொங்கல் அன்றைக்குச் சருக்கரைப் பொங்கலுடன் பதினாறு வகைக் காய்கறிகள் சமைத்துச் சிறப்பு விருந்தாகக் குடும்பத்தோடு உண்டு மகிழும் பழக்கம் உண்டு.

கிறித்தவர்களோ ‘சமத்துவப் பொங்கல்’ எனும் பெயரில் தேவாலயங்களிலேயே கரும்புடன் பொங்கல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்!

கல்லூரிகளில் பொங்கல் விடுமுறை துவங்குவதற்கு முன் நாள் மாணவர்-மாணவியர் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் சமய வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் ஒற்றுமையாகச் சேர்ந்து கல்லூரி வளாகத்திலேயே பொங்கல் வைத்துக் குலவையிட்டு ஒன்றாகக் கூடி உண்டு களிப்பதையும் நாம் ஆண்டுதோறும் பார்த்து வருகிறோம். 


எல்லாவற்றுக்கும் மேலாக, தென் தமிழகத்தில் இசுலாமியத் தமிழர்களுக்கும் இந்து போன்ற பிற சமுகத் தமிழர்களுக்கும் இடையே மாமன் – மைத்துனன், சித்தப்பா – சித்தி, தாத்தா, அப்பு, சீயான் எனக் குடும்ப உறவுமுறைகளே கூட இன்றும் உள்ளன! உலகில் வேறெங்குமே காண முடியாத, தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பு இஃது என்கிறார் வரலாற்று ஆய்வாளர் கோம்பை எஸ்.அன்வர்.

ஆக, தமிழர் திருநாளான பொங்கல் மட்டுமில்லை, தமிழர்களின் உறவுமுறைகளே கூடக் காலம் காலமாகச் சமய எல்லைகள் கடந்து கொண்டாடப்பட்டு வருபவைதாம்!

தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே காணப்படும் இந்த உறவுமுறையைத் தமிழ்நாடு முழுவதுமே பரவலாக்க, உலகில் தமிழ் மக்கள் வாழும் எல்லா இடங்களிலும் தழைக்கச் செய்யக் காணும் பொங்கல் ஒரு சிறப்பான தேர்வு.

சொந்த ஊரில் வாழ்கிற உறவுகளைத் தேடிச் சென்று பார்க்க முடியவில்லை என்பதற்காகக் காணும் பொங்கலை வெறும் கேளிக்கைப் பூங்காக்களில் கழிக்காமல் அக்கம் பக்கத்திலுள்ள மற்ற சமயத்து மக்களோடு செலவிட்டால் தமிழ் மண்ணுக்கே உரிய இந்தச் சமயம் கடந்த உறவுமுறைப் பெருமை காலத்துக்கும் தொடரும்; தமிழர் தனிப்பெரும் விழாவான பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஊறி என்றென்றும் நீடிக்கும்.

அதற்காக மட்டுமில்லை, எல்லாச் சமயத்தினரும் உதிரம் சிந்திப் பெற்றுத் தந்த விடுதலையை அடித்தளமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது இந்நாடு; ஆனால் இந்து எனும் ஒற்றைச் சமயத்துக்கான நாடாக இதை மாற்ற இப்பொழுது முழு வீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நேரத்தில் சமயம் கடந்த இத்தகைய உறவுமுறைகளை நம் அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டுவதும் கட்டிக் காப்பதும் காலத்தின் கட்டாயம்!

எனவே இனியும் காணும் பொங்கலை வெறும் சொந்தங்களுக்கு இடையிலான உறவைப் புதுப்பிக்கும் விழாவாக இல்லாமல் வழிவழியாக இங்கே சாதி – சமய எல்லைகள் கடந்து நிலவி வரும் உறவுமுறைகளை மீட்டெடுக்கும் விழாவாகக் கொண்டாடுவோம்! நாடெங்கும் பரப்பப்படும் சமயவாதப் பெருந்தீயை அன்பெனும் மாமழையால் அணைத்துக் காட்டுவோம்! 

அனைவர்க்கும் அன்பு கமழும் போகி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு,
திருவள்ளுவர் நாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
(காணும் பொங்கலுக்காக நான் தினச்செய்தி நாளிதழில் எழுதியது).

படங்கள்: நன்றி Giphy.com, நியூசு 7.

தொடர்புடைய பதிவுகள்:
சூரியனை இல்லை, உழவர்களை வணங்கிக் கொண்டாட வேண்டிய பொங்கல் இது!
தைப்புரட்சியை அடுத்து வரும் தலைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ஏறு தழுவலுக்காகப் பொங்கலைத் தவிர்க்காதீர்கள்! தமிழ்ப் பகைவர்களுக்கு வெற்றியை அளிக்காதீர்கள்! 
 

Share the post

இப்படியும் கொண்டாடலாம் காணும் பொங்கல்! – சமயவாதம் தகர்க்கும் ஒரு புது முயற்சி

×

Subscribe to அகச் சிவப்புத் தமி

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×