Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

நடிகைகளின் கதை (U)

‘நடிகைகளின் கதை’ என்கிற தலைப்பில் தொடர் எழுத வேண்டும் என்று ‘தினகரன் வசந்தம்’ இதழுக்காக கேட்டதுமே சந்தோஷத்தில் விசிலடிக்க ஆரம்பித்தேன். ஏனெனில் அந்த டைட்டிலுக்கு வெகுஜன இதழ்களிலும், வாசகர்கள் மத்தியிலும் இருக்கும் மவுசு அத்தகையது.

புகுந்து விளையாடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் குயிலைப் பிடித்து கூண்டில் அடைத்து கூவச்சொன்ன கதையாக சில நிபந்தனைகளை விதித்தார்கள். அவற்றில் முக்கியமானது நடிகைகள் என்பதால் எங்குமே கொஞ்சம் ‘அப்படி இப்படி’ என்று எல்லை மீறி எழுதிவிடக்கூடாது என்பதுதான். ஒவ்வொரு நடிகையின் வாழ்க்கையிலும் நாம் உணரவேண்டிய படிப்பினை ஒன்றாவது இருக்கும். அதை ஹைலைட் செய்துக் காட்ட வேண்டியதே தொடரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்கள்.

அசைவத் தலைப்பில் சைவத்தொடரை அசுவாரஸ்யமாகதான் ஆரம்பித்தேன். தொடரின் நான்காவது வாரம் வந்த ஒரு போன்கால் நினைவுகூறத்தக்கது. அரசியல் கட்சியொன்றின் மாநிலப் பொறுப்பில் இருந்தவர் பேசினார். ‘மம்தா மோகன்தாஸ் பற்றி எழுதியிருக்கீங்க. அவங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் எங்க இயக்கம் செய்யும்’. அட, நாம எதிர்ப்பார்க்காத ஏரியாவிலிருந்தெல்லாம் ரெஸ்பான்ஸ் வருதே என்று குஷியானேன். பற்றிக்கொண்டது உற்சாக நெருப்பு. அந்த உற்சாகத்தின் அளவு, நாற்பது வாரங்களுக்கு நீண்டது.

இத்தொடரில் மறக்க முடியாத அத்தியாயம் ஸ்ரீவித்யாவைப் பற்றி எழுதியது. ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்ததுமே லேசாக மூளைக்குள் பல்பு அடித்தது. எனவே அப்படம் வெளிவருவதற்கு முன்பே ஸ்ரீவித்யாவின் கதையை வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவிட வேண்டும் என்கிற அக்கறையில் எழுதி வெளியிட்டோம். பரவலான பாராட்டுகளை பெற்ற அத்தியாயம் அது.

இந்திய நடிகைகள், தமிழ் நடிகைகள் என்கிற குறுகிய எல்லை அமைத்துக் கொள்ளாமல் உலகளவில் ஏதோ ஒரு காரணத்துக்காக பேசப்படுகிற நடிகைகள் என்று பலரையும் அறிமுகம் செய்தோம். இப்போது நூலாக்குவதற்காக மொத்தமாக வாசிக்கும்போதுதான் தெரிகிறது, கிட்டத்தட்ட எல்லா நடிகைகளின் கதையையுமே ஏதோ ஒரு சரடு இணைக்கிறது என்று.

தொடராக எழுதத் தொடங்கியதிலிருந்தே வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வந்துக் கொண்டே இருக்கும். ‘சில்க்கின் கதையை எப்போது எழுதுவீர்கள்?’. எங்களுக்கும் எழுத ஆசைதான். ஆனால் எழுதக்கூடாது என்று விடாப்பிடியாக ஒரு லட்சுமணரேகையை எங்களுக்கு முன்பாக வரைந்துக் கொண்டோம். ஏனெனில் சில்க்கின் கதையை அறியாத தமிழரே இருக்க முடியாது. பல்வேறு கட்டுரைகளாகவும், புத்தகங்களாகவும் வந்த கதை அவருடையது. அதுவுமில்லாமல் ‘நடிகைகளின் கதை’யில் சில்க் என்பது க்ளிஷேவான விஷயமாக இருக்கும் என்கிற தயக்கமும் இருந்தது. எனினும் சில்க்கை தவிர்க்க முடியுமா என்ன. ஃபிலிம்பேர் இதழில் (1984 டிசம்பர்) தன் திரையுலக வாழ்வின் உச்சத்தில் இருந்தபோது சில்க் கொடுத்திருந்த நேர்காணலை அப்படியே தமிழாக்கம் செய்து கடைசி அத்தியாயமாக கொடுத்தோம். அரிதான அந்த பேட்டி சில்க்கின் ஆளுமையை வாசகர்கள் யூகித்துக்கொள்ள வழிவகுக்கும்.

இந்நூல் அச்சுக்கு செல்ல தயாராகும் நேரத்தில் இன்னொரு இனிய திருப்பம். ஷகிலா, ‘தினகரன் வெள்ளிமலர்’ இதழுக்காக நேர்காணல் தர ஒப்புக்கொண்டார். ‘ஷகிலா பேசுகிறேன்’ என்கிற தலைப்பில் வெளியான அந்த நேர்காணல், திரைக்குப் பின்னான ஷகிலாவை அச்சு அசலாக வாசகர்களிடம் கொண்டு சேர்த்தது. ஷகிலா குறித்த பல கற்பிதங்களை உடைத்திருக்கும் அந்த பேட்டியையே இந்நூலின் முதல் அத்தியாயமாக சேர்த்திருக்கிறோம்.

இந்த நூலின் தலைப்பில் வேண்டுமானால் ‘கதை’ இருக்கலாம். ஆனால் இங்கே விவரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நூறு சதம் நிஜம்.

- ‘நடிகைகளின் கதை’ நூலின் முன்னுரை

வண்ணத்திரையில் நான் கண்ட முதல் நாயகியான ஸ்ரீதேவிக்கு இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

பக்கங்கள் : 192  விலை : ரூ.150/-
வெளியீடு : சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர்,
சென்னை - 600 004. போன் : 42209191 Extn : 21125
Email : [email protected]


This post first appeared on Yuvakrishna, please read the originial post: here

Share the post

நடிகைகளின் கதை (U)

×

Subscribe to Yuvakrishna

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×