Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தமிழகத்தின் மருமகன் முத்தையா முரளிதரன் எடுத்த 800 ஆவது விக்கெட்!!!!!

இலங்கையில் பரதேசி -26
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2017/10/blog-post_10.html

Muthiah Muralitharan 
காலே கோட்டையின் மேலிருந்து பார்க்கும்போது காலே கிரிக்கெட் மைதானம் தெரிந்தது. வெள்ளையுடை அணிந்து அங்கு இரு குழுக்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அது சர்வதேச விளையாட்டாக இருந்தால் உடனே போயிருப்பேன். ஆனால் ஏதோ லோக்கல் டோர்னமென்ட்டாக இருக்கும்போல. விளையாடுபவர்களைத்தவிர்த்து காலரிகளில் அதிகப்பேர் காணப்படவில்லை. இருபுறமும்  இந்தியப்பெருங்கடல் சூழ மைதானமே மேலிருந்து பார்க்க ஒரு தீவு போலவே தெரிந்தது. அதனால் உலகத்திலுள்ள எல்லா கிரிக்கெட் மைதானங்களில் இதுவே அழகு மிகுந்தது என்று போற்றப்படுகிறது.
Galle Stadium from the Fort

நமக்கெல்லாம் தெரிந்தது போல இங்கிலாந்தில் உருவான கிரிக்கெட் அவர்களால் அடிமைப்படுத்தப்பட்ட எல்லா நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. இன்றைக்கு அந்த நாடுகளில் மட்டுமே கிரிக்கெட் விளையாடப்படுகிறது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியுஜிலாந்த், கனடா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, பாக்கிஸ்தான், பங்களாதேஷ்(எந்த நாடாவது விட்டுப்போச்சா மக்களே?) மற்றும் நம் நாடான இந்தியா ஆகிய நாடுகளில் மட்டுமே இது விளையாடப்படுகிறது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கிரிக்கெட்டைப்பற்றி யாருக்கும் தெரியாது.
When he took 800th wicket in Galle
 அதுமாதிரிதான் காலேவில் பிரிட்டிஸாரால் 1876ல் அமைக்கப்பட்ட குதிரைப் பந்தைய மைதானம்தான் பிற்காலத்தில் கிரிக்கெட் விளையாடப் பயன்படுத்தப்பட்டு அதன் பின்னர் 1927ல் கிரிக்கெட் ஸ்டேடியமாக முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் கிளப்பும் காலே கிரிக்கெட் கிளப்பும் இதில் விளையாடி வருகின்றன. ஒரே சமயத்தில் மொத்தம் 35000 பேர் இதில் உட்கார்ந்து ஆட்டத்தை ரசிக்க முடியும்.
முதல் தரப்போட்டிகள் இங்கு 1984லிருந்து நடத்தப்படுகின்றன. ஆனாலும் உலக அளவிலான முதல் டெஸ்ட் போட்டி இங்கு 1998ல் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் இலங்கை இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டி இங்கு 1998ல் இலங்கை இந்திய ஆணிகளுக்கிடையே நடந்தது. இது மழையினால் நின்று போனது.
சமீபத்தில் ஜூலை 17ல் இந்தியா இலங்கைக் கிடையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றிபெற்றது உங்களுக்குத் தெரியும்.
கடைசியாக நடந்த போட்டி கடந்த ஜூலையில் ஜிம்பாப்வே  இலங்கைக் கிடையே நடந்த போட்டி.
இலங்கையில் உள்ள மொத்தம் 7 சர்வதேச அரங்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
2004ல் வந்த சுனாமியால் இந்த அரங்கும் பெரும் சேதத்தைக் கண்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பலரும் இங்கு வந்து தற்காலிகமாக தங்கியிருந்தனர். மக்களுக்கு உதவுவதற்காக இங்கு ஒரு முகாம் அமைக்கப்பட்டு ஹெலிதளமொன்றும்  உருவாக்கப்பட்டதாம்.
பின்னர் போட்டிகள் நடைபெறமுடியாத நிலையில் 2006மே மாதம் சீரமைப்புப் பணி ஆரம்பிக்கப்பட்டு டிசம்பர் 2007ல் மறுபடியும் திறக்கப்பட்டது. அப்போதிருந்த இலங்கையின் குடியரசுத் தலைவர் மகிந்தே ராஜபக் ஷே இதனைத் திறந்து வைத்தார். சுனாமிக்குப்பின் நடந்த  புதுப்பிக்கும் பணிக்கு 50 கோடிக்கு மேல் செலவானது. உலகளவில் அதற்கு நன்கொடை திரட்டப்பட்டது. ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் மற்றும் இங்கிலாந்தின் ஐயன் போத்தம் ஆகியோர் குறிப்பிட்ட அளவில் கொடையளித்தனர்.

Add caption
புதிதாகக் கட்டப்பட்ட விஐபி பெவிலியனுக்கு மகிந்தா ராஜபக்சேவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் 500 பேரளவில் விஐபிகள் அமர முடியும். அதே நாளில் நடைபெற்ற இலங்கை இங்கிலாந்துக் கிடையே டெஸ்ட் மேட்ச் டிராவில் முடிந்தது.
2010ல் ஓய்வு பெற்ற இலங்கையின் தலைசிறந்த பந்து வீசுபவரான முத்தையா முரளிதரன் இங்குதான் தன் கடைசி மேட்சை விளையாடினார். 
அந்த மேட்ச் விளையாடும் போது ஒரு சுவாரஸ்ய நிகழ்ச்சி நடந்தது. முத்தையா முரளிதரன் ஏற்கனவே 792 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அந்தக் கடைசி மேட்சில் எட்டு விக்கெட்டுகள் எடுத்தால் 800 விக்கெட்டுகள் எடுத்த வீரராக ஆக முடியும். எனவே அவர் மேல் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் பிரஷ்ஷரும் கூடிக் கொண்டு இருந்தது. அந்த மேட்சில் தனது முதல் விக்கெட்டாக அதாவது 793-ஆவது விக்கெட்டாக அவர் வீழ்த்தியது சச்சின் டெண்டுல்கரை அடுத்து, முதல் இன்னிங்சிலேயே மடமடவென்று இன்னும் நாலு விக்கெட்டை எடுத்து 797 என்று வரும் போது ரசிகர்களின் ஆர்வமும் உற்சாகமும் கரைபுரண்டது. பரபரப்பான அந்த சூழ்நிலையில் நடந்த 2-ஆம் இன்னிங்சில் அடுத்த இரண்டு விக்கெட்டுகளை வேகமாக எடுத்து அவருடைய மொத்த எண்ணிக்கை 799-ஆனது. ஆனால் அந்த கடைசி விக்கெட்டான 800 ஐத் தொடுவதற்கு வெகு நேரமானது. ஆனாலும் 800 ஐத் தொட்டு நற்பெயரோடும் புகழோடும் அவர் ஓய்வு பெற்றார். அப்படி அவர் எடுத்த 800 ஆவது விக்கெட் பிரக்யான் ஓஜா.

முத்தையா முரளிதரன் ஒரு தமிழன் என்பதோடு அவர் தமிழ் நாட்டு மருமகனும் ஆவார். அடையாறு மருத்துவமனையின் நிறுவனர்  டாக்டர் ராமமூர்த்தி  டாக்டர் நித்யா தம்பதிகளுக்குப் பிறந்த மகளான மதிமலர்   அவர்களை  திருமணம் செய்து கொண்டார்.
அதுபோல இந்த மைதானத்தில் பல சாதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. பொதுவாக இந்த மைதானம் ஸ்பின் பவுலிங்கு ஏற்றதாக கருதப்படுகிறது. அதனால் தான் இங்கு மொத்தம் நடந்த 23 டெஸ்ட் மேட்ச்சுகளில் 12 போட்டிகளை இலங்கை வென்றிருக்கிறது. இலங்கையின் ஸ்பின் பவுலர்கள் உலகில் சிறந்தவர்கள் அல்லவா? ஆனால் இங்கு நடந்த 8 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை ஜெயித்தது 2-ல் தான். ஆறு டெஸ்ட் போட்டிகள் டிரா ஆகியிருக்கிறது.
காலே கிரிக்கெட் ஸ்டேடியம் பற்றி பல விவரங்களைப் படித்த மக்களே நேரில் போய்ப் பார்க்க வேண்டும் போலத் தோன்றுகிறதா? அடுத்த மேட்சுக்கு தயாராகுங்கள் போய் வரலாம்?
அடுத்து எங்கே என்று  அம்ரியிடம் கேட்டபோது கடலுக்குள்ளே போகலாம் என்றான். சுனாமி வந்தால் என்ன செய்வது? என்று யோசித்தேன்

- தொடரும்.


பின்குறிப்பு : நண்பர்களே நான் வரும் ரெண்டு வாரங்கள் ஜெர்மனி செல்ல விருப்பதால்   அக்டோபர் 23 முதல் நவம்பர் 03 வரை பதிவுகள் வராது .தயை கூர்ந்து பொறுத்துக்கொள்ளுங்கள் . ஜெர்மனியில் இருக்கும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.பெர்லினில் சந்திக்கலாம் .([email protected])

உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும் அன்புக்கும் என்றென்றும்  கடமைபட்டிருக்கிறேன் .



This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

தமிழகத்தின் மருமகன் முத்தையா முரளிதரன் எடுத்த 800 ஆவது விக்கெட்!!!!!

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×