தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது? முதலில் ஜல்லிக்கட்டுக்குத் தடை. இப்போது பொங்கல் தினம் தேசிய விடுமுறை நாளிலிருந்து நீக்கப்படுகிறது.
முதுகெலும்பாத சமூகமாக தமிழ் சமூகம் மாறிவருகிறது. நெஞ்சை நிமிர்த்தி விழுப்புண்களை வாங்கி, தப்பித்தவறி முதுகில் புண்பட்டால் உயிரை விட்டு மானத்தோடு வாழ்ந்த சமூகம் இது. யார் வந்தாலும் வாருங்கள், தலைகுனிந்து இடுப்பை வளைத்துக் கும்பிடுவோம், தாள் பணிவோம், காசுக்கு ஆள் சேர்ப்போம் , தகுதியாவது ஒன்றாவது, பணமும் பதவியும் மட்டுமே எங்களுக்கு முக்கியம். பொதுமக்களோ, நாட்டு முன்னேற்றமோ ம்ஹும் அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலையில்லை. எலும்பைப் போட்டால் நாய் வாலாட்டாமல் போய்விடுமா?.நம்ம மக்கள் தானே காசைக் கொடுத்தால் ஓட்டுப் போடுவார்கள்.
Add caption |
இதோ ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கலைத் தொடர்ந்து வரும் புதிய உத்தரவுகள். முடிந்தால் தடுத்துப்பாருங்கள்.
1. பொங்கல் விழா தடை செய்யப்படுகிறது. பொங்கல் மற்றும் கரும்பு சாப்பிடுவதற்கும் தடை.
2. இட்லி, தோசை, அரிசி உணவுகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு சப்பாத்தி, ரொட்டி போன்ற கோதுமை உணவுகள் மட்டுமே உட்கொள்ள ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
3. சாம்பார் ரசம், மோர் ஆகியவை ஒதுக்கப்பட்டு, தடுக்கா நவரத்தன் குருமா, சன்னா மசாலா ஆகியவை அறிமுகப்படுத்தப்படுகின்றன.
4. வேட்டி கட்டுவது முற்றிலுமாகத் தடை செய்யப்படுகிறது. இனிமேல் தார் பாட்சா, குர்தா ஆகியவற்றை மட்டுமே அணிய வேண்டும்.
5. சேலை கட்டுவது மொத்தமாக நிறுத்தப்பட்டு சுரிதார் தேசிய உடையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
6. தமிழ்மொழி பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது. தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியையும் பேசத்தடை இல்லை.
7. ஆட்சி மொழியாக சமஸ்கிருதமும், பேச்சு மொழியாக இந்தியும் இனி நடைமுறைப்படுத்தப்படும்.
8. தமிழகத்தின் காய்கறிகளான கத்திரிக்காய், முருங்கைக்காய் ஆகியவை ஒழிக்கப்பட்டு ,உருளை, முட்டைக்கோஸ், பீட்ரூட் மட்டுமே உண்ண பணிக்கப்படுகிறது.
9. நெல் பயிரிட தடை செய்யப்படுகிறது. வேணுமென்றால் பாசுமதி மட்டுமே பயிரிடலாம். மற்றபடி கோதுமைக்குத் தடையில்லை.
10. தமிழ்த் தொலைக்காட்சிகள் முற்றிலுமாக தூர்தர்ஷனாக மாற்றப்படுகிறது.
11. தமிழ் விளையாட்டுக்களான கிட்டிப்புள், ஆடுபுலி ஆட்டம், பரமபதம், பல்லாங்குழி, கண்ணாமூச்சு, கிச்சு கிச்சுத்தாம்பாளம் ஆகியவை ஒழிக்கப்படுகின்றன.
12. தமிழ் தெய்வங்களான, முருகன், மதுரை வீரன், முனியாண்டி, பாண்டி முனி, காளி, முத்தாலம்மன், இசக்கி, கண்ணகி ஆகியவை தடை செய்யப்படுகின்றன.
13. முருகனின் அறுபடை வீடுகள் , தொல்பொருள் ஆராய்ச்சிக்கழகத்தின் மூலம் தேசிய உடமை ஆக்கப்படுகின்றன.
14. தமிழ்நாடு என்ற ஒன்று இனிமேல் இல்லை. மராட்டியர் ஆண்ட திருச்சி, தஞ்சாவூர் மகாராஷ்டிரத்துடன் இணைக்கப்படுகிறது. திருநெல்வேலியும் கன்னியாகுமரியும்,கோயம்புத்தூரும் கேரளத்துடனும் சேருகிறது. காஞ்சிபுரமும், சென்னையும் ஆந்திரத்துடன் இணைகிறது. வேலூர், தர்மபுரி, ஓசூர் கர்நாடகத்துடன் வருகிறது. ராமநாதபுரமும் ராமேஸ்வரமும் கச்சத்தீவு போல இலங்கைக்குத் தாரை வார்க்கப்படுகிறது.
கற்பனையில் எழுத்துவதற்கே கை நடுங்குகிறது. இதுவே உண்மையானால்.
இந்த லட்சணத்துல பொங்கல் வாழ்த்து எப்படி சொல்றது ?
இருந்தாலும் தடை செய்யும்வரை சொல்லித்தானே ஆகவேண்டும் .
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பின் உரையாடல் :
"ஆமா சேகரு தலைப்புல முதுகெலும்பு இல்லாத சமூகம்னு போட்டிருக்கியே , அதுக்கு என்னடா அர்த்தம் ?"
"அதுவாடா மகேந்திரா , அதான் நல்லா குனிஞ்சு வளைஞ்சு கும்பிடுறாய்ங்களே அதைத்தான் சொன்னேன்".