Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

வாசிப்பு குறைகிறதா?

ஆமாம் என்கிறார்கள் அறிவுஜீவிகள் பலரும். குறிப்பாக இலக்கியவாதிகள்.

இவர்களிடம் புள்ளிவிவரம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. விளக்கமாக கேட்டால், ‘அந்தக் காலத்தில் நாங்கள்லாம்…’ என்று நீட்டி முழக்குகிறார்கள்.

ஆனால் –

இந்தியாவில் அச்சுப் பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று சொல்கிறது Indian readership survey.

“இப்போல்லாம் யாரு சார் புக்கு படிக்கிறா? என் பையனுக்கு தமிழே படிக்கத் தெரிய மாட்டேங்குது. எப்பவும் நெட்டுலேதான் இருக்கான்” என்றெல்லாம் ஜல்லியடிக்காமல், கொஞ்சம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை வாசியுங்கள்.

Readership Studies Research Council of India (RSCI) மற்றும் Media Research Users Council (MRUC) ஆகிய இரு நிறுவனங்களும்தான் IRS கணக்கீடுகளை வெளியிடுகின்றன. 2014க்கு பிறகு 2017ல் மூன்று ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வெளியிட்டிருக்கின்றன.

2017ஆம் ஆண்டு கணக்கீடுகளின் அடிப்படையில் புதிய பதிப்பு நிறுவனங்களின் அலை வலுவாக வீசுவது தெரியவந்திருக்கிறது.

கடந்த மூன்றாண்டுகளில் மட்டுமே பதினோரு கோடி புதிய வாசகர்கள் (நகர்ப் புறங்களில் 4 கோடி, கிராமப் புறங்களில் 7 கோடி), இந்திய நாளிதழ்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்கிறது IRS 2017. அடுத்த மூன்றாண்டுகளில் 40 சதவிகித அளவுக்கு இந்த வளர்ச்சி இன்னமும் விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்றும் கணிக்கிறார்கள்.

நகர்ப்புறங்களில் அச்சுப் பத்திரிகைகளை வாசிப்பவர் எண்ணிக்கை உயர்வது இயல்புதான். எனினும், தற்போதைய வாசிப்புப் புரட்சிக்கு சொந்தக்காரர்கள் இந்திய கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இந்திய கிராமப்புறங்களில் பரவலாக கல்வியறிவு கிடைத்து வருவதால், அச்சுப் பத்திரிகைகளுக்கு கணிசமான வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது.

சராசரியாக இந்தியாவில் நாளிதழ்கள் 105 கோடி பேர்களால் வாசிக்கப்படுகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் தமிழின் வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் 44%.

தமிழில் இப்போது ‘தினத்தந்தி’, ‘தினகரன்’, ‘தினமலர்’ ஆகிய மூன்று நாளிதழ்கள் மட்டுமே (ஆங்கிலம் தவிர்த்த டாப்-10 பட்டியலில் இவை மூன்றுதான் இடம்பெற்றிருக்கின்றன) சுமார் 4 கோடியே 69 லட்சம் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.

நாளிதழ் தவிர்த்து இதழ்களைப் பொறுத்தவரை கடந்த மூன்றாண்டுகளில் வாசிப்பு எண்ணிக்கை அப்படியே இரு மடங்காகி இருக்கிறது. 2014ல் 4 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை, இப்போது 2017ல் 7 கோடியே 80 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

பிராந்திய மொழி இதழ்களைப் பொறுத்தவரை இந்திய அளவில் 2017 டாப்-10 பட்டியலில் ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் என்று மூன்று இதழ்கள் பெருவாரியான வாசகர் எண்ணிக்கை அடிப்படையில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த மூன்று இதழ்களுக்கும் சேர்த்து தோராயமாக 72 லட்சம் வாசகர்கள் இருக்கிறார்கள். தமிழ் தவிர்த்து மலையாளம் மற்றும் வங்காள இதழ்கள் மட்டுமே முதல் பத்து இடத்தில் இருக்கின்றன.

தமிழில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை கொண்ட இதழ்களாக ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’, ‘குங்குமம்’, ‘புதிய தலைமுறை’, ‘அவள் விகடன்’ ஆகியவை விளங்குகின்றன.

இணையத்தின் தாக்கம்?

இந்தியாவைப் பொறுத்தவரை இப்போதைக்கு இணையத்தைக் கண்டு அச்சுப் பத்திரிகைகள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

இணையம், ரேடியோ என்கிற ஊடகத்தோடுதான் இப்போது வரை மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது.

இணையத்தின் வளர்ச்சி, சினிமாத்துறையைதான் பெருமளவில் பாதித்திருக்கிறது (இந்த பாதிப்பிலும்கூட ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் சினிமாத்துறை வியத்தகு அளவுக்கு – வணிக அடிப்படையில் - வளர்ந்திருக்கிறது).

சென்னை புத்தகக் காட்சியில் வழக்கமான விற்பனை இல்லை. இலக்கிய நூல்கள் விற்கவில்லை என்றெல்லாம் பின்னூட்டம் போடாதீர்கள். மேற்கண்ட புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, இவர்களில் எவ்வளவு சதவிகித வாசகர்களை இலக்கியம் பக்கம் தள்ளிக் கொண்டு வரலாமென்று திட்டம் தீட்டி செயல்படுத்தினால் கணிசமான முன்னேற்றம் நிச்சயம். அதற்கு ஊடகத்துறையை தொடர்ச்சியாக கவனித்துவரும் நல்ல media expertகளின் ஆலோசனைகள் அவசியம். என்னிடம் யாராவது பரிந்துரை கேட்டால் வெயிட்டாக ஃபீஸ் கேட்பேன் என்று எச்சரிக்கிறேன்.


This post first appeared on Yuvakrishna, please read the originial post: here

Share the post

வாசிப்பு குறைகிறதா?

×

Subscribe to Yuvakrishna

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×