Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ரஜினி – காலாவதியான கவர்ச்சி!

“முதல் படத்துலேயே சிகரெட்டு புடிச்சிக்கிட்டு பொறுக்கி மாதிரி வந்தான். அப்போ இவனெல்லாம் இவ்ளோ பெரிய ஆளா வருவான்னு நெனைக்கவே இல்லை” - ‘ராஜாதி ராஜா’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோது, ‘அபூர்வ ராகங்கள்’ பற்றி என்னுடைய பெரியம்மா சொன்னது இது.

“அப்புறம் எப்படி பெரிம்மா, இவ்ளோ பெரிய ஸ்டார் ஆனாரு?”

“அப்போவெல்லாம் சிவப்பா இருந்தாதான் ஹீரோ. குப்பை பொறுக்குற கேரக்டருலே நடிச்சாகூட நல்லா மேக்கப் போட்டுக்கிட்டு ஹீரோ சிவப்பாதான் இருக்கணும். முதல் தடவையா ரஜினிதான் கேரக்டருக்கு ஏத்த தோற்றத்துலே கருப்பா, களையா இருந்தான். ‘மூன்று முடிச்சு’, ‘பதினாறு வயதினிலே’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘முள்ளும் மலரும்’ படத்துலே எல்லாம் அந்தந்த கேரக்டருக்கு ஏத்தமாதிரி ரஜினி இருப்பான். கிராமத்துப் படத்துலே நடிச்சாகூட கமல், அய்யிரு பையன்தான். ஆனா, ரஜினி அப்படியே நம்மளை மாதிரியே இருந்ததாலே ஜனங்களுக்கு பிடிச்சிப் போச்சு. அதேமாதிரிதான் விஜயகாந்தும்”

ரஜினி, திரையுலகுக்கு அறிமுகமான சூழல் இங்கே குறிப்பிடத்தக்கது. அறுபது வயதை கடந்துவிட்ட எம்.ஜி.ஆர், கட்சி ஆரம்பித்து அரசியலில் மும்முரமாகி விட்டார். அவரைவிட இரண்டு, மூன்று வயது குறைவான காதல் மன்னன் ஜெமினி கணேசன், வண்ணமயமாகிவிட்ட தமிழ் சினிமாவில் தன் முகத்தை குளோஸப்பில்கூட காட்டமுடியாத அளவுக்கு கிழடு தட்டிவிட்டார். இளமையிலேயே முதுமையாக தோற்றமளித்த சிவாஜியும் ஐம்பது வயதை கடந்து நிஜமாகவே முதுமையை எட்டிவிட்டார்.

போட்டியே இல்லாமல் சிவக்குமார்தான் கோலோச்சிக் கொண்டிருந்தார். பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறார், நன்கு நடனமும் ஆடத்தெரிகிறது, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்கிற கோதாவில் கமல்ஹாசன் வளரத் தொடங்கியிருந்தார். திரையுலகில் எப்போதுமே இருதுருவ ஆதிக்கம் நிலவ வேண்டும் என்கிற மனோபாவம் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, இண்டஸ்ட்ரியில் இருப்பவர்களுக்கும் உண்டு. சமூகரீதியாக பார்க்கப் போனாலும் திராவிட ஆட்சி தொடரும் தமிழகத்தில், ஒரு பார்ப்பனரை தலைமீது தூக்கி வைத்து கொண்டாட சமூகம் தயாரில்லை. அதனடிப்படையில் போட்டியே இல்லாமல் கமலுக்கு எதிராக நிலைநிறுத்தப்படுகிறார் ரஜினி.

1975ல் திரையுலகுக்கு அறிமுகமான ரஜினிகாந்த், ‘பில்லா’, ‘முரட்டுக்காளை’ என்று நட்சத்திரமாக உருவெடுக்க ஐந்தாண்டு காலம் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். சுமாரான தோற்றத்தோடு ‘அழகான’ ஹீரோக்களோடு போட்டி போட, தன்னுடைய யதார்த்த நடிப்பையே ஆயுதமாக்கி மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக ரஜினிக்கு அமைந்த கேரக்டர்கள், அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறது. அவர் முழுநீள ஹீரோவாக உருவெடுப்பதற்கே 25 படங்களும், மூன்று ஆண்டுகளும் முழுமையாக தேவைப்பட்டிருக்கிறது.

கைவிட்டு பைக் ஓட்டுவதும், சிகரெட்டை தூக்கிப் போட்டுப் பிடிப்பதும் பெரும் ஃபேண்டஸியாக கருதிய அந்தகால இளைஞர் கூட்டம் ரஜினியை முரட்டுத்தனமாக கொண்டாடியதில் ஆச்சரியமேதுமில்லை.

தன்னுடைய நூறாவது படம் வரைக்கும் பரிசோதனை முயற்சிகளில் தீவிரமாக இறங்காமல், வணிகரீதியாக தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வதில் கமல்ஹாசன் மும்முரமாக இருந்தார்.

ஆனால் -

ரஜினியோ மிக துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று கலைரீதியான படைப்பாக சினிமாவை கருதக்கூடிய இயக்குநர்களிடம் பணிபுரிவதை விரும்பினார்.

1980ல் ‘முரட்டுக்காளை’யில் ரஜினிக்கு கிடைத்த மகத்தான வெற்றிதான் அவருடைய மாற்று சினிமா முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது. வெற்றியின் ருசி கொடுத்த போதையால் அடுத்தடுத்த பிரும்மாண்ட வணிக வெற்றிகளை நோக்கி ஓடத்தொடங்கினார். இடையிடையே ‘கை கொடுக்கும் கை’, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ மாதிரி ஆசைக்கு ஏதோ சோதனை செய்து தோல்வியுற்றார்.

‘முரட்டுக்காளை’ மாதிரியே பிரும்மாண்டமான வெற்றியை ‘சகலகலா வல்லவன்’ படத்தில் கமல் எட்டினார்.

ஆனால் –

இந்த வெற்றியை கண்டு அவர் பயப்படத் தொடங்கினார். நாலு ஃபைட்டு, ஆறு பாட்டு என்று தன்னை தமிழ் திரையுலகம் முடக்கிவிடுமோ என்று பதறினார்.

இந்த இருவேறு வெற்றிகள்தான் அடுத்த சில பத்தாண்டுகள் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றின.

வெற்றி மேல் வெற்றி என்கிற இலக்கை நோக்கி ரஜினியும், தமிழ் சினிமாவில் அதுவரை யாரும் செய்யாதவை என்கிற பரிசோதனை முயற்சிகளில் கமல்ஹாசனும் ஈடுபடத் தொடங்கினார்கள்.

1985ல் ரஜினிக்கு நூறாவது படம் அமைந்தது. தன்னை அறிமுகம் செய்த பாலச்சந்தர்தான் தன்னுடைய நூறாவது படத்தை இயக்க வேண்டும் என்று ரஜினி விரும்பினார். எனினும், அந்தப் படம் ‘தண்ணி, சிகரெட்’ மாதிரி லாகிரி வஸ்துகளுக்கு ஆட்பட்ட ரஜினி படமாக இல்லாமல், வேறொரு ரஜினியை – அதாவது ஆன்மீக ரஜினி – காட்டக்கூடியதாக, தன்னுடைய இஷ்டதெய்வமான ‘ஸ்ரீ ராகவேந்திரர்’ பெருமையை தமிழர்களுக்கு எடுத்துச் சொல்வதாக இருக்க வேண்டுமென்று நினைத்தார்.

ரேஸ் குதிரையாக முதலிடத்தில் ஓடி லட்சம் லட்சமாக கொட்டிக் கொண்டிருக்கும் குதிரையை பூட்டி சாமி தேர் இழுத்தால் வேலைக்கு ஆகாது என்று பாலச்சந்தர் மறுத்தார். எனினும் ரஜினிக்காக படத்தை தயாரிக்க முன்வந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘ஸ்ரீராகவேந்திரர்’ படுதோல்வி. நியாயமாக பார்க்கப் போனால், ஆன்மீகம் தனக்கு வேலைக்கு ஆகாது என்பதை ரஜினி அன்றே உணர்ந்திருக்க வேண்டும்.

ரஜினியை ஸ்டைல் மன்னன் ரஜினியாக பார்க்கதான் ரசிகர்கள் விரும்பினார்களே தவிர, அவரிடமிருந்து பொழுதுபோக்கைதான் எதிர்ப்பார்த்தார்களே தவிர வேறொன்றுமில்லை.

உதாரணத்துக்கு 1987 தீபாவளியை சொல்லலாம்.

கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தை சிறப்புக் காட்சியாக ரஜினி பார்க்கிறார்.

“இந்த தீபாவளி கமலோட தீபாவளி. தமிழில் யாருமே பண்ணாத சாதனையை ‘நாயகன்’ மூலமா செஞ்சிருக்காரு. ரொம்ப சாதாரணமான நம்மோட ‘மனிதன்’ எடுபடாது” என்று வெளிப்படையாகவே ‘மனிதன்’ இயக்கிய எஸ்.பி.முத்துராமனிடமும், தயாரித்த ஏ.வி.எம்.சரவணனிடமும் சொல்லியிருக்கிறார்.

“அது கமல் படம். இது ரஜினி படம். நீங்க வேணும்னா பாருங்க. ரெண்டுமே நல்லா ஓடும்” என்று சமாதானப்படுத்தி இருக்கிறார் எஸ்.பி.முத்துராமன். ரஜினிக்கு சமாதானமாகவில்லை.

ஆனால் –

எஸ்.பி.முத்துராமன் சொன்னதுதான் நடந்தது.

கமல்ஹாசனை அறிவுஜீவியாக, பரிசோதனைகளுக்கு தயாரான எலியாகவே ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். கமல்ஹாசனின் படம் ஏதாவது சாதாரண பொழுதுபோக்கு படமாக வந்தால், அவருடைய வெறித்தனமான ரசிகர்களேகூட ‘ஒரு தடவை பார்க்கலாம்’ என்று உதட்டை பிதுக்க ஆரம்பித்தார்கள். இதனாலேயே படத்துக்கு படம் ஏதாவது வித்தியாசம் என்று முயற்சித்து மண்டையை பிய்த்துக் கொண்டார் கமல். முன்பாக எவ்வளவோ ஜிமிக்ஸெல்லாம் காட்டி தலைசிறந்த பொழுதுபோக்குப் படமாக அவர் உருவாக நினைத்த ‘விக்ரம்’ கதை இப்படிதான் கந்தலானது.

ரஜினி, ரஜினியாகவே தோன்றினால் போதும். அவர் ஏதாவது முயற்சித்தால்தான் ரசிகர்களுக்கு சோதனை. பீரியட் ஃபிலிமாக அவர் பிரும்மாண்ட செலவில் முயற்சித்த சொந்தப் படமான ‘மாவீரன்’ படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையே தொண்ணூறுகளில் தொடர்ந்தது.

ரஜினியின் ஒவ்வொரு படமும் முந்தையப் படத்தின் வசூல்சாதனையை முறியடித்து வந்தன. கமல் கிட்டத்தட்ட கருத்து கந்தசாமியாகவே ஆகிவிட்டார் (இருவருக்கும் ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால், இதுவே பொதுவான நிலையாக இருந்தது)

அதாவது –

ரஜினியை மாஸ் மன்னனாகவும், கமலை ஒப்பீனியன் மேக்கர் என்கிற அளவிலும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இதற்கிடையே எம்.ஜி.ஆரின் மறைவு, ரஜினிக்கு ‘தலைவர்’ ஆகும் கெத்தை கொடுத்தது. அவருடைய படங்களில் சோ-வின் உதவியோடு அரசியல் பஞ்ச் வசனங்கள் இடம்பெறத் தொடங்கின.

‘அண்ணாமலை’யில் தொடங்கியது ரஜினிக்கு அரசியல் பஞ்சாயத்து. தொடக்கத்திலிருந்தே ஏனோ ரஜினியை ஜெயலலிதாவுக்கு பிடிக்காது. அவரை மட்டம் தட்டும் விதமாகவே நடந்துக் கொண்டு வந்திருக்கிறார். ‘நதியை தேடி வந்த கடல்’, ‘பில்லா’ படங்களில் ஹீரோ (நம்ம ரஜினிதான்) கருப்பாக இருக்கிறார் என்று நடிக்கவே மறுத்தவர் ஜெயலலிதா.

அப்படிப்பட்டவர் ஆட்சி அதிகாரத்துக்கே வந்த நிலையில், நண்டு சிண்டுகளால் ‘தலைவர்’ என்று அழைக்கப்படும் ரஜினியை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

வசூலில் ரஜினியின் மாஸ்டர்பீஸாக ‘பாட்ஷா’ அமைந்தது. தமிழ் சினிமாவிலேயே அதிக முறை நுழைவு டிக்கெட் கிழிக்கப்பட்ட படம் என்கிற பெருமையை சிவாஜியின் ‘திரிசூலம்’ பெற்றிருந்தது. அந்த சாதனையை கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’ முறியடித்தது. இரண்டு படங்களின் சாதனையையும் நொறுக்கி, இன்றுவரையிலான மகத்தான சாதனையை ‘பாட்ஷா’வில் செய்தார் ரஜினி.

‘அன்று; தளபதி. நேற்று; மன்னன். நாளை?’ என்று ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்ட ஜெயலலிதா கடுப்பானார். அதற்கு ஏற்ப ‘பாட்ஷா’ வெற்றிவிழாவில் மயில்தோகையால் மெல்ல ஜெ. தலைமையிலான அரசை ரஜினி விமர்சிக்க, முட்டிக் கொண்டது. ‘முத்து’ படத்தில், “நான் பாட்டுக்கு என் வழியில் போயிக்கிட்டிருக்கேன். எதுக்கு தடங்கல் பண்ணுறீங்க” என்று வசனம் வைத்து ஜெ.வை சீண்டினார்.

அடுத்து 1996ல் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் நேரடியாகவே ஜெ.வுக்கு எதிராக போர்முழக்கம் செய்தார் ரஜினி. அரசியலில் குதித்து அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக ஆட்சியைப் பிடிப்பார் என்று யூகங்கள் வந்துக் கொண்டிருந்த நிலையில், அந்த சூழலை சுக்குநூறாக உடைத்தார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ். வேறு வழியின்றி சோ ஆலோசனையுடன் திமுக கூட்டணியை ஆதரித்து, ஜெ.வை பழிதீர்த்துக் கொண்டார்.

ரஜினி படமென்றால் வெள்ளிவிழா என்கிற நிலையை தாண்டி ‘முத்து’, ‘அருணாச்சலம்’, ‘படையப்பா’ படங்கள் 250 நாட்கள் ஓடி வைரவிழா கண்டன. இதைவிட பெரிய வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்கிற சுமை அழுத்த, குழப்பத்தில் சினிமாவில் நடிப்பதையே சில ஆண்டுகள் தவிர்த்தார் ரஜினி.

2001ல் மீண்டும் ஜெ. ஆட்சி.

இம்முறை அரசியல் கருத்துகளோடு சுடச்சுட களமிறங்க திட்டமிட்டார் ரஜினி. இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறாரே ஆன்மீக அரசியல், அதையே கருத்தாக்கி ‘பாபா’ எடுத்தார்.

படுதோல்விதான் பரிசு. தன்னுடைய நூறாவது படமான ‘ஸ்ரீராகவேந்திரா’வை விடவும் கசப்பான அனுபவத்தை ‘பாபா’வில் பெற்றார்.

‘என்னோட சூப்பர் ஸ்டார் பட்டமெல்லாம் அவ்வளவுதானா?’ என்று ரஜினி புலம்புமளவுக்கான தோல்வி.

ரஜினியிடம் மக்கள் எதிர்ப்பார்ப்பது பொழுதுபோக்கே தவிர, அரசியலோ சமூகக் கருத்துகளோ கிடையாது என்பதை ஆணித்தரமாக ‘பாபா’வுக்கு நேர்ந்த கதி நிரூபித்தது. ஏனெனில் ரஜினியைவிட டீக்கடை பெஞ்சுகளில் ‘தினத்தந்தி’ வாசிக்கும் சாமானியனுக்கே அரசியல் அதிகம் தெரியும். சமூகத்தைப் பற்றிய புரிதலும் அதிகம்.

அரசியல் கருத்துகளால் கீழே விழுந்த குதிரையான ரஜினி, மீண்டும் தன்னுடைய பொழுதுபோக்கு சேணத்தை தட்டிப் போட்டு ‘சந்திரமுகி’யில் வரலாற்று வெற்றியை எட்டினார். அடுத்து ஏவிஎம்மின் ‘சிவாஜி’, ஷங்கரின் ‘எந்திரன்’ படங்களில் வசூல் சாதனை புரிந்தார்.

‘படையப்பா’ வரையில் ரஜினி நடித்தாலே வெற்றி என்கிற நிலைதான் இருந்தது. அப்போது அவருக்கு இருந்த கவர்ச்சி அப்படி. ஐம்பது வயதை கடந்தும் அவர் ஹீரோவாக நடிக்கும் நிலையில் ரஜினிக்காக படம் ஓடும் என்கிற நிலை மாறி, ரஜினி நடித்த படம் நன்றாக இருந்தால் மட்டுமே ஓடும் என்கிற சூழல்தான் இப்போது நிலவுகிறது. ‘பாபா’, ‘குசேலன்’, ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ என்று அடுத்தடுத்த தோல்விகளும், ‘கபாலி’ போன்ற ஆவரேஜ்களும் நியாயமாக ரஜினிக்கு நிலைமையை விளங்கப்படுத்தியிருக்க வேண்டும்.

அதாவது ரஜினியின் கவர்ச்சி காலாவதியாகி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகப்போகிறது. சினிமாவிலேயே படுதோல்வி அடைந்த ‘பாபா’ கருத்துகளோடு 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு ‘2.0’, ‘காலா’ படங்களை ஓடவைப்பதற்கான அவருடைய வழக்கமான விளம்பர யுக்தியா அல்லது நிஜமாகவே ஒருமுறை ஆழத்தில் கால்விட்டு பார்ப்போமா என்கிற அசட்டுத் துணிச்சலா என்பது இன்னும் ஓரிரு ஆண்டுகளிலேயே தெரிந்துவிடும்.


This post first appeared on Yuvakrishna, please read the originial post: here

Share the post

ரஜினி – காலாவதியான கவர்ச்சி!

×

Subscribe to Yuvakrishna

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×