Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஆலையில்லா ஊருக்கு அறம்!

பொதுவாக தான் நடிக்கும் படங்களின் ஆடியோ மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதையே தவிர்க்கும் நயன்தாரா, முதன்முறையாக வானத்தில் இருந்து இறங்கி தியேட்டர் விசிட் அடித்திருக்கிறார். ரஜினி பாராட்டி விட்டார். ரஞ்சித், நயன்தாராவை தோழர் என்று நெக்குருகி அழைக்கிறார். வாசுகி பாஸ்கர் புகழ்ந்து தள்ளுகிறார். தோழர்கள் தோள் மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள். தலித்துகள் பெருமிதப்படுகிறார்கள். தமிழின இணையப் போராளிகள் ஆஸ்கர் அவார்டையே தூக்கிக் கொடுத்து விட்டார்கள். பத்திரிகையாளர்கள் பிரிவ்யூ காட்சியிலேயே கதறி அழுதிருக்கிறார்கள்.

அப்படியாப்பட்ட ‘அறம்’ அப்படியெல்லாம் இல்லை என்பதே உண்மை.

கோபிநைனார் நல்ல வசனகர்த்தா என்று தெரிகிறது. முன்பு விஜயகாந்துக்கு நாடி நரம்பெல்லாம் துடிக்க லியாகத் அலிகான் என்றொருவர் வசனம் எழுதிக் கொண்டிருந்தார். அந்த பாணியில் நக்கல், நையாண்டியுடனான அரச எதிர்ப்பு வசனங்களை துடிப்பாக எழுதியிருக்கிறார்.

ஆனால்-

இயக்கம்?

கிட்டி, நயன்தாராவை விசாரிக்கும் காட்சியில் தொடங்கி, கிளைமேக்ஸ் வரை அத்தனை அமெச்சூர்த்தனம். ஒரு சீஃப் செக்ரட்டரி (அப்படிதான் நினைக்கிறேன். அவர்தானே கலெக்டரை விசாரிக்க முடியும்?) இவ்வளவு மொக்கையாக சீரியல் மாமனார் மாதிரியா கேள்விகளை கேட்பார்?

ப்ளாஷ்பேக்கில் விரியும் கதையில் நயன்தாரா நேரடி சாட்சியாக இருந்திருக்க வாய்ப்பில்லாத ராமச்சந்திரன் – சுனுலட்சுமி பாத்திரங்களின் பின்னணி சித்தரிப்பு இடம்பெறுவதே தர்க்கமில்லாதது. மாவட்ட ஆட்சியரான நயன்தாராவை பார்த்து கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர் பார்த்ததையும், குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான பதில்களையும் சொல்லுவதுதானே சரியாக இருக்க முடியும்? கேட்டால் சினிமாவென்றால் அப்படிதான் என்பார்கள். அப்படியெனில் இது எப்படி உலகப்படம் ஆகும்?

படத்தின் மையம் என்பது ராமச்சந்திரனின் குழந்தை, ஆழ்துளைக் கிணறில் விழுவதும், குழந்தையை சக அதிகாரிகளின் ஒத்துழையாமை மற்றும் அரசியல் குறுக்கீட்டுத் தடைகளை தாண்டி கலெக்டர் மீட்பதும்தான்.

ஆனால்-

படத்தின் தொடக்கம் தண்ணீர்ப் பிரச்சினை என்பதாக தொடங்கி, ஏழ்மை உள்ளிட்ட தமிழ் சமூகத்தின் சர்வப் பிரச்சினைகளுக்கும் வசனங்களாலேயே தீர்வு கண்டுவிடலாம் என்கிற நோக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல கலெக்டர் நயன்தாராவுக்கு மதிவதனி என்கிற பெயரை வைத்ததின் மூலம் தொப்புள் கொடி உறவுகளின் உரிமைக்குரலுக்கும் வலு சேர்த்திருக்கிறார் இயக்குநர்.

ஊடகங்களை தோலுரிப்பதெல்லாம் சரிதான். அதற்காக படத்தின் இடைஇடையில் காட்டப்படும் ‘நியூஸ்-18’ விவாதம் மூலம் இயக்குநர் என்ன சொல்லவருகிறார். அதிலும் இளங்கோ கல்லாணை டிவி விவாதங்களில் பேசுவதையே சகித்துக் கொள்ள முடியாது. சினிமாவிலும் அவரை உளறவைத்து கொட்டாவி விடவைப்பதெல்லாம், ரசிகனை செய்யும் மகா டார்ச்சர் அல்லவா கோபி சார்? பெருமாள் மணியும் அவர் பாட்டுக்கும் வந்து ஆழ்துளைக்கிணறு பிரச்சினையை பேசியிருந்தால், இந்த டார்ச்சர் இன்னும் ‘முழுமை’ பெற்றிருக்கும்.

படத்தின் ஆகப்பெரிய அபத்தம் கிளைமேக்ஸ். 93 அடி கிணற்றில் விழுந்திருக்கும் குழந்தையை தூக்க, இன்னொரு குழந்தையை கயிறு கட்டி அனுப்புகிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நாளை இதுபோல ஓர் ஆழ்துளை துயர சம்பவம், கொட்டாம்பட்டியிலோ பெண்ணாத்தூரிலோ நடந்தால்.. அங்கிருக்கும் ஊர்மக்கள் இதே பாணியில் முயற்சி செய்து ஏதேனும் விபரீதம் நிகழ்ந்தால் அதற்கெல்லாம் யார் பொறுப்பு?

இதேபோல குழியில் விழுந்துவிடும் ஒரு குழந்தையை காப்பாற்றும் திரைப்படம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருக்கிறது. ஜெயராம் – ஊர்வசி தம்பதியினரின் மகள் ஷாம்லி விழுந்துவிடுவார். மலையாளப்படமான இது தமிழில்கூட ‘பூஞ்சிட்டு’ என்பது மாதிரி ஏதோ பெயரில் டப்பிங் செய்து வெளியானது. அந்த காலத்தில் எடுக்கப்பட்ட படத்துக்கே உறைபோடக்கூட ‘அறம்’ காணாது.

மாறாக, ‘அறம்’ படத்துக்கு இப்படி பாராட்டுகள் விளம்பரமாக குவிவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

இயக்குநர், தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்கிற ஒருவரி தகவல் முக்கியமான காரணம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கைதூக்கி விடுவோம் என்கிற சமூகநீதி எண்ணத்தால், இந்தப் படத்துக்கு விமர்சனம் நீக்கப்பட்ட பாராட்டுகள் குவியலாம். நல்ல விஷயம்தான்.

ஆனால் –

ஒடுக்கப்பட்ட ஒருவரின் திறமையான படைப்புக்கு அப்படிப்பட்ட அங்கீகாரங்கள் கிடைத்தால் சரி. ‘அட்டக்கத்தி’க்கு கிடைத்த கவனம் நியாயமானதே. மாறாக, மிக சுமாரான ஒரு படத்தை சூப்பர் என்று சொல்லுவதின் மூலம், சம்பந்தப்பட்டவர் தன்னுடைய நிஜமான திறமையை எடைபோடக்கூட முடியாமல் குருவி தலையில் பனங்காய் வைக்கும் முயற்சியாகவே இதை பார்க்கத் தோன்றுகிறது.

அடுத்து, தோழர்கள்.

இவர்களைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. ‘கத்தி’யையே கம்யூனிஸப் படம் என்று கொண்டாடியவர்கள். நாலு கோமாளிகளை சேர்த்து மநகூ அமைத்து தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடலாம் என்று கருதியவர்கள். இப்படி ஒப்புக்கு பெறாத விஷயங்களை பேசியாவது தாங்கள் உயிர்ப்போடு இருப்பதை நிரூபித்துக்கொள்ள வெறித்தனமாகதான் முயற்சிப்பார்கள்.

இப்போது தமிழில் படமெடுக்க நினைக்கும் படைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும் ‘பீப்லி லைவ்’தான் ஆதர்சப் படமாக இருக்கிறது. அதை தாண்டி ஒரு படத்தை எடுத்துவிட வேண்டுமென்று துடியாக துடிக்கிறார்கள். நாம் ஏன் ‘பீப்லி லைவ்’ எடுக்க வேண்டுமென்று தெரியவில்லை. நாம் எடுக்க வேண்டியது ‘பதினாறு வயதினிலே’க்கள்தான். அந்தப் படத்தின் சாதனையையே நாற்பது ஆண்டுகளாக இதுவரை உடைக்கவில்லை.

‘அறம்’ மாதிரியான சுவாரஸ்யமற்ற/தர்க்கமற்ற படங்களைதான் நாம் தேசிய/சர்வதேச அரங்கில் மற்ற மொழிகளுக்கு போட்டியாக முன்நிறுத்துகிறோம் என்றால், தமிழ் சினிமாவும் எடப்பாடி அரசு மாதிரி படைப்பு வறட்சியால் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்றே பொருள்.

எந்தவித கலைவிமர்சன நோக்குக்கும் இடம் கொடுக்காதவாறு ஏகோபித்த பாராட்டுகளை அள்ளியிருக்கும் ‘அறம்’ படத்துக்கு மாநில, மத்திய அரசுகளின் சில விருதுகள்கூட கிடைக்கலாம். ஆளும் தரப்பை மிக மென்மையாக யாருக்கும் வலிக்காமல் எதிர்த்து கையாண்ட ‘ஜோக்கர்’ படத்துக்கே விருது கொடுக்கவில்லையா? மிக மிக சுமாராக நடித்திருந்த நயன்தாராவுக்கு தேசிய விருது கிடைத்தால்கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை. படத்தின் இறுதியில் அவர் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வதாக சித்தரிக்கப்பட்டதைபோல, நிஜத்திலேயே அரசியலில் குதித்து ஆட்சியைப் பிடித்தாலும் யாரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை. ஏனெனில், இது தமிழ்நாடு.


This post first appeared on Yuvakrishna, please read the originial post: here

Share the post

ஆலையில்லா ஊருக்கு அறம்!

×

Subscribe to Yuvakrishna

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×